இரட்டிப்பு மகிழ்ச்சி: அருளகம் அமைப்பிற்குத் தமிழ்நாடு அரசின் விருதுகள்!
வணக்கம்,
தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சார்பில், இயற்கை வளங்களைப் பாதுகாப்பதில் தனித்துவமான பங்களிப்பை வழங்கும் அமைப்புகளுக்கு விருதுகள் வழங்கிச் சிறப்பிக்கப்படுகிறது. அந்த வகையில், சூழலியல் மற்றும் காட்டுயிர் பாதுகாப்பில் ‘அருளகம்’ ஆற்றி வரும் அர்ப்பணிப்பான பணிகளை அங்கீகரிக்கும் விதமாக, தற்போது இரண்டு முக்கிய விருதுகள் கிடைத்துள்ள மகிழ்ச்சியான செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.
- சமூகப் பங்கேற்பு இயற்கைப்பாதுகாப்புத் தலைமைத்துவ விருது (Community Conservation Leadership Award) - 2026
பாறு கழுகுகளைப் பாதுகாப்பதற்காக நாம் மேற்கொண்டு வரும் தொடர் முயற்சிகளைப் பாராட்டி இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட சேத்துமடையில் நடைபெற்ற விழாவில், மாண்புமிகு வனத்துறை அமைச்சர் திரு. இராஜ கண்ணப்பன் அவர்கள் இவ்விருதினை அன்று 26-02-2026 அன்று வழங்கிப் பெருமைப்படுத்தினார்.
இவ்விருது, எமது குழுவைச் சேர்ந்த செல்வி சுந்தரி, செல்வி ரேவதி, திரு. பரமன் மற்றும் திரு. சந்தோஷ் கிருஷ்ணன் ஆகியோரின் அயராத உழைப்பிற்கும், கூட்டு முயற்சிக்கும் கிடைத்த அங்கீகாரமாகும். இது எங்களை இன்னும் வீரியத்துடன் செயல்படத் தூண்டும் பெரும் உந்துதலாக அமையும்.


- பசுமை முதன்மையாளர் விருது - 2026 (Green Champion Award)
கோயம்புத்தூர் மாவட்டத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் உள்ளூர் மர இனங்களை மீட்டெடுக்கும் நாற்றுப்பண்ணை நுட்பங்களுக்காக அருளகம் இவ்விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்த விருது பாராட்டுச் சான்றிதழுடன், ரூ. 1 லட்சம் பரிசுத் தொகையையும் உள்ளடக்கியது.
நேற்று (13-03-2026) மாலை கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பவன்குமார் ஜி. கிரியப்பனவர், இ.ஆ.ப. அவர்கள் இவ்விருதினை வழங்கினார். நிகழ்வில் மாவட்ட வன அலுவலர் திரு. வெங்கடேஷ் பிரபு, இ.எப்.எஸ். அவர்களும் கலந்துகொண்டார்


தொடர்ச்சியாகக் கிடைத்துள்ள இந்த இரண்டு விருதுகளும் எங்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியையும், கூடுதல் பொறுப்புணர்வையும் வழங்கியுள்ளன. இந்த வெற்றிப்பயணத்தில் துணையாக நின்ற அனைத்து நல் உள்ளங்களுக்கும், அருளகம் பணியாளர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பில் தொலைநோக்குப் பார்வையுடன் செயல்படும் தமிழ்நாடு அரசையும், அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் வனத்துறைச் செயலாளர் திருமதி சுப்ரியா சாகு, இ.ஆ.ப. அவர்களையும், சுற்றுச்சூழல் துறைத் தலைவர் திருமதி ஜெயந்தி, இ.எப்.எஸ். அவர்களையும் வாழ்த்துகிறோம். அத்துடன் . திரு. ஸ்ரீனிவாஸ் ஆர். ரெட்டிIFS, முதன்மைத் தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் வனப்படைத் தலைவர் திரு. ராகேஷ் குமார் டோக்ராIFS, முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் தலைமை காட்டுயிர்ப் பாதுகாவலர், திரு. அனுராக் மிஸ்ராIFS, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றச் சிறப்புச் செயலாளர்,ஆகியோருக்கும் எங்களது நெஞ்சார்ந்த நன்றிகளையும் வாழ்த்துகளையும் சமர்ப்பிக்கிறோம்.
எனது தகப்பனார் உயிரோடு இருந்திருந்தால் இவ்விருதை எண்ணிப் பெருமிதம் கொண்டிருப்பார். நான் தேர்ந்தெடுத்த பாதையில் பயணிக்க உதவிய அவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளை காணிக்கையாக்குகிறேன்.

இயற்கை காப்போம், இயற்கைப் பாதுகாப்பிலும் வெல்வோம் ஒன்றாக
அருளகம் குழுவினர்.
