சிறியூர் மாரியம்மன் திருவிழாவில் பாறுக் கழுகுகள் குறித்த விழிப்புணர்வு கண்காட்சி
பாறு கழுகுகள் இறந்தவற்றைத் தின்று சுற்றுப்புறத்தை நோய்நொடிகள் பரவாவண்ணம் காக்கின்றன. தற்போது அவை அழிவின் விளிம்பில் உள்ளன. தமிழ்நாட்டில் வெண் முதுகுப் பாறு, கருங்கழுத்துப் பாறு, செம்முகப் பாறு, மஞ்சள் முகப்பாறு என நான்கு வகையான ‘பாறு’ கழுகுகள் காணப்படுகின்றன. இவை பெரும்பாலும் சத்தியமங்கலம் மற்றும் முதுமலை புலிகள் காப்பகப் பகுதிகளில், குறிப்பாக மாயார் ஆற்றை ஒட்டிய காடுகளில் வாழ்ந்து வருகின்றன.
இந்த பாறுக் கழுகுகளின் எண்ணிக்கை மிகவும் குறைந்து வருவதால், அவற்றைப் பாதுகாப்பது மிக முக்கியமானதாக உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு அருளகம் இயற்கைப் பாதுகாப்பு அமைப்பு, மக்களுடன் இணைந்து பாறுக் கழுகுகள் பாதுகாப்பு மற்றும் கால்நடைகளுக்கு தடை செய்யப்பட்ட மருந்துகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, சிறியூர் மாரியம்மன் கோவில் திருவிழாவில் பாறுக் கழுகுகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கண்காட்சி நடத்தப்பட்டது.

சிறியூர் மாரியம்மன் கோவில் திருவிழா ஆண்டுதோறும் நடைபெறும் ஒரு முக்கியமான பழங்குடியினர் மற்றும் படுகர் திருவிழா ஆகும். பழங்காலத்தில் இக் கோவில் பழங்குடியினர் சமூகத்திற்கு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த நாளிலிருந்து இன்று வரை இந்த கோவிலை கட்டி பராமரிப்பதும், திருவிழாவை நடத்துவதும் அவர்களே பொறுப்பாக செய்து வருகின்றனர். கோவிலில் நடைபெறும் பூஜைகளையும் பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்த பூசாரி மேற்கொள்கிறார்.

இந்த திருவிழாவில் மரத்தால் செய்யப்பட்ட “பட்டி தாத்தா” என்ற பொம்மைகளைப் பயன்படுத்தி பாரம்பரிய நடனம் ஆடி, மாவிளக்கு எடுத்துச் செல்லும் வழக்கம் உள்ளது. அந்த மரப் பொம்மைகள் ஆனைக்கட்டி பகுதியைச் சேர்ந்தவரால் உருவாக்கப்பட்டது.

சிறியூர் பகுதி பாறுக் கழுகுகள் காணப்படும் முக்கியமான பகுதியாக இருப்பதால், அங்கு வரும் மக்களிடம் பாறுக் கழுகுகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவது மிகவும் அவசியமானதாகும். அதனால் இத்திருவிழாவைப் பயன்படுத்தி பாறுக் கழுகுகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கண்காட்சி நடத்தப்பட்டது.

இந்த கண்காட்சியில் பாறுக் கழுகுகள் பற்றிய பல்வேறு தகவல்களை விளக்கும் மொத்தம் 24 ஸ்லைடுகள் (Slides) மக்களுக்காகக் காட்சிப்படுத்தப்பட்டன. இதில் பாறுக் கழுகுகளின் வகைகள், அவற்றின் வாழிடம், அவற்றுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்கள் மற்றும் பாதுகாப்பின் அவசியம் போன்ற தகவல்கள் இடம் பெற்றிருந்தன.
இந்த விழிப்புணர்வு கண்காட்சியில் சுமார் 10000க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு பாறுக் கழுகுகள் பற்றிய தகவல்களை அறிந்துகொண்டனர்.
