International Pollution Elimination Network (IPEN) அமைப்பின் பொதுச் சபை உறுப்பினர்களுக்கான தெற்காசிய அளவிலான கூட்டம் | திசம்பர் 2-4, 2025 | இலங்கை
International Pollution Elimination Network (IPEN) அமைப்பின் பொதுச் சபை உறுப்பினர்களுக்கான தெற்காசிய அளவிலான கூட்டம் திசம்பர் 2 லிருந்து-4 வரை இலங்கையின் தலைநகர் கொழும்புவில் நடைபெற்றது. கூட்டம் நடைபெறத்திட்டமிட்டிருந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் பலத்த புயல்சேதம் ஏற்பட்டு இலங்கையைப் புரட்டிப்போட்டிருந்தது.
சென்னை வரை சென்று குடிபெயர்வு எல்லாம் முடிந்து இலங்கை செல்லும் விமானத்தில் () ஏறுவதற்காக காக்கவைக்கப்பட்டபோது அடை மழை காரணமாக விமானம் தரை இறங்குவதற்கான வாய்ப்பு இல்லை என்று கூறி எங்களைத் திருப்பி அனுப்பினர். இதனால் கொழும்பில் இறங்கி இணைப்பு விமானத்தில் செல்வோர் அதிகம் பாதிக்கப்பட்டனர். அதுகுறித்து விமானப் பணியாளர்கள் சிறிதும் அலட்டிக்கொள்ளவில்லை. அலட்சியமான பதிலை அளித்தனர். அடுத்த ஓரிரு நாட்களிலேயே இண்டிகோ விமானமும் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டது. நிகழ்ச்சி நடக்குமா நடக்காதா என்று பெரும் ஐயம் எழுந்தாலும் நிலைமை சீரடைந்துவிட்டது எனக்கூறி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அழைத்தனர்.
தெற்காசியளவில் இயங்கும் பல்வேறு சூழல் செயல்பாட்டாளர்களும் நாம் கண்டுகொள்ளாமல் இருக்கும் சூழல் பாதிப்புகள் குறித்துக் கவனப்படுத்தினர். குறிப்பாக என்றென்றும் இருக்கும் வேதிப்பொருள் என அழைக்கப்படும் Per and poly Fluoroalkyl Substance (PFAS) பங்களாதேசில் ஏற்படுத்தி வரும் தாக்கம் குறித்துப் பேசப்பட்டது. இது பங்களாதேசில் மட்டுமல்ல இந்தியாவிலும் குறிப்பாக ஆயத்த ஆடை உற்பத்தி செய்யும் இடங்களிலெல்லாம் இதன் தீவீரம் உள்ளது என்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கது.
பூச்சிக்கொல்லி மருந்துகள் இலங்கையின் சுற்றுச்சூழலில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்துக் கவனப்படுத்தப்பட்டது.
Phthalates தாலேட்டுகள் என அழைக்கப்படும் நெகிழி மென்மிகள் உடலில் நிகழ்த்தும் மாற்றம் குறித்து கவலை தெரிவிக்கப்பட்டது. நெகிழியை மென்மைப் படுத்தவும் நீடித்த உழைக்கவும் சேர்க்கப்படும் இவற்றால் உடலில் இயற்கையாக உற்பத்தி ஆகும் ஹார்மோன்களைச் சீர்குலைத்து வருவது குறித்தும் குறிப்பாக இவை டையாபர்களில் சேர்க்கப்படுவதால் குழந்தைகளின் கற்றல்திறனிலும் பெரிதும் மாற்றம் நிகழ்வது குறித்து கவனப்படுத்தப்பட்டது.
அளவுக்கு அதிகமாக மாத்திரைகள் எடுத்துக்கொள்வதாலும் வளர்ப்பு விலங்குகளுக்குத் தரப்படும் மருந்துகளாலும் மனித உடலில் நுண்ணியிர் எதிர்ப்பு அதிகரித்துவருவது உலகம் முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது என்றும் அரசுகள் விழித்துக்கொண்டு செயல்படவேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
காரீயம் செய்யும் காரியம் குறித்தும் எச்சரிக்கை தெரிவிக்கப்பட்டது. அளவுக்கு அதிகமாக காரீயம் கலக்கப்படும் வண்ணப்பூச்சுகளால் உருவாகும் ஆபத்து குறித்து அருளகம் முன்னமே களப்பணியாற்றியுள்ளது. வண்ணப்பூச்சுகள் மட்டுமின்றி பாரம்பரிய மருத்துவ முறைகளிலும் காரீயம் கலக்கப்படுகிறது. இது நம் கவனத்திற்கு வருவதில்லை. இது குறித்தான எனது பார்வையைப் பகிர்ந்துகொள்ளும் வாய்ப்புக்கிடைத்தது. வரும் காலங்களில் இது குறித்துக் கவனப்படுத்தி வேலை செய்ய அருளகம் திட்டமிட்டுள்ளது.
மூன்று நாள் நிகழ்வும் புதிய பார்வையையும் வரப்போகும் ஆபத்தையும் சவாலையும் விளக்கும் விதமாகவும் எதிர்கொள்ளத் தயார்படுத்தும் விதமாகவும் இருந்தது.
