Vulture Conservation

Vulture Survey

இதுகாறும் கருங்கழுத்துப் பாறுக் கழுகுகளின் கூடுகள் முதுமலைப் புலிகள் சரணாலயத்தில் மட்டுமே இருப்பது பதிவு செய்யப்பட்டிருந்தது. தற்போது அது சத்தியமங்களம் புலிகள் சரணாலயத்தில் முதல் முறையாக அருளகம் குழு பதிவு செய்துள்ளது என்பதை மகிழ்வுடன்  தெரிவித்துக்கொள்கிறேன். இது பத்தாண்டு தேடலுக்குப் பின்னர் கிடைக்கப்பெற்ற நல்வாயப்பு.

சத்தியமங்களம் பவானிசாகரிலிருந்து தெங்குமரகடாவை நோக்கிய அதிகாலைக் களப்பயணத்தின் போது  காலை 8.30 மணிக்கெல்லாம்  பாறுக் கழுகு கூட்டம் வானில் வட்டமடித்ததைப் பார்த்திருக்கிறேன். அந்தக் கூட்டத்தை எண்ணிப் பார்த்தபோது சுமார் 11 கழுகுகள் இருந்தன. முதலில் இவை முதுமலைப் பகுதியிலிருந்து கிளம்பி இந்த வேளையில் இரைதேட  வந்துவிட்டன என்று தான் எண்ணினேன். ஆனால் முதுமலைப் பகுதியிலும் காலை இதே நேரத்தில் வட்டமடித்ததைப் பார்த்தபோது, இந்தக்கூட்டம் அதுவல்ல என்றும் இவை வேறு ஒரு கூட்டமாக இருக்கும் என்றும் இவை இங்குதான் ஏதோ ஓர் இடத்தில் தங்கி இருக்கக்கூடும் என்றும் யூகித்தேன். அதற்கேற்றார்ப்போல பின்னர் ஒரு முறை மாலை நேரத்தில் சுமார் 5.30 மணிவாக்கில் தெங்குமரகடாவிலிருந்து திரும்பி வந்துகொண்டிருந்தபோதும், அதேபோல 11 எண்ணிக்கையிலான பாறுக் கழுகுகள் கூட்டம் வானில் வட்டமடித்ததைப் பார்த்தேன். அத்துடன் எனது எண்ணத்திற்கு வலுச் சேர்க்கும் விதமாக வனத்துறைப் பணியாளர்களும் கழுகுக்கூட்டை மலைமுகட்டில் பார்த்திருப்பதாகத் தெரிவித்தனர். 
அதனை உறுதிப்படுத்துவதற்காகப் பத்தாண்டுக்கு முன்னர் அதிகாலையில் கூழித்துறைப்பட்டிப் பகுதியிலிருந்து கிளம்பி கடுநடைப் பயணமாக மலை உச்சியை நோக்கி மெல்ல மெல்ல ஊர்ந்து நகர்ந்தோம். அங்குச் சென்று பார்த்தபோது, வேறு ஒரு வகைக் கழுகான, ராஜாளிக் கழுகுகளின் கூடு தான் தென்பட்டது. அது ஒருபுறம் மகிழ்ச்சியைத் தந்தாலும் நாம் தேடியது கிட்டவில்லையே என்ற ஏக்கமும் இருந்தது. வேறு சில நண்பர்களும் சென்று பார்த்துவிட்டு இராஜாளிக் கழுகுகளின் கூடு தான் இருக்கின்றன என்று கூறினர். சிலமுறை முயற்சித்தபோதும், பல்வேறு காரணங்களால் அப்பகுதியில் புதிய கூடுகள் ஏதும் பார்ப்பதற்கான வாய்ப்புக் கைகூடவில்லை. ஆனால் அது குறித்துத் தீவிரமாகத் தேடவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.Vulture Survey

ஆயினும் ஒவ்வொரு முறை தெங்குமரகடாவை நோக்கிச் சென்றபோதும் இந்த எண்ணம் எனக்குள் வட்டமடித்துக்கொண்டிருக்கும். அவற்றைப் பார்ப்பதற்கான வாய்ப்பைத் தேடிக்கொண்டிருந்தேன். இந்தமுறை கணக்கெடுப்பிற்குச் செல்லும்போது, பார்க்காமல் விட்ட முகடுகளைத்  தேர்வு செய்தேன். என்னுடன் பறவை ஆர்வலரும் ஆராய்ச்சியாளருமான முனைவர் கிறிஸ்டோபர் அவர்களும் கலந்துகொண்டார்.

காலை எட்டுமணிக்கெல்லாம் மலையுச்சியில் இருந்தால் தான் அவை எங்கிருந்து கிளம்புகின்றன என்பதைப் பார்க்கமுடியும் என்று முடிவுசெய்து கிளம்பினோம். ஆயினும் மலை உச்சிக்குச் சென்று சேர்ந்தபோது மதியம் 11 மணியாகிவிட்டது.  எனது எண்ணம் ஈடேறவில்லையே என வருத்தப்பட்டேன். ஆயினும் ஒரு மலையுச்சியை நோக்கி எனது கண்களைத் திருப்பியபோது, வெண்ணிறப்படிவுகள் அள்ளித்தெளித்தாற்போலக் கண்ணில் பட்டன. ஆகா இது ஏதோ ஒரு கழுகின் கூடாக இருக்கவேண்டுமே என்று எண்ணித் தொலைநோக்கியைத் திருகி உற்றுப் பார்த்தபடி இருந்தேன். அப்போது ஒரு பறவை இறங்கி அங்குபோய் உட்கார்ந்தது. உச்சிவேளையில் அடித்த எதிர் வெயிலும் பாறையிலிருந்து கிளம்பும் தகிப்பும் கண்களைக் கூசச் செய்ததால் என்னால் சரிவரப் பார்க்கமுடியவில்லை. இன்னும் சிறிது ஏறிச்சென்று பார்க்கலாம் என்று நினைத்தபோது,  மலை மிகவும் சரிவாக இருந்ததால் ஏறிச் செல்ல முடியவில்லை. ஆயினும் ஒருவாறாக குச்சியின் உதவியுடன் ஒரு இடத்தை அடைந்து  சென்று பார்த்தபோது, பறவை அமர்ந்திருந்தது தெரிந்தது.அரசல்புரசலாக அது கருங்கழுத்துப் பாறுக்கழுகாக இருக்கலாம் என்று யூகித்தேன். ஆயினும் சரிவரத்தெரியவில்லை. ஏறிச்சென்ற களைப்பில் பசி எடுத்தது. அங்கேயே அமர்ந்து கொண்டுசென்ற எலுமிச்சைச் சோற்றை உண்டுகொண்டே அந்த முகட்டைப் பார்த்துக்கொண்டிருந்தேன். உணவுண்டுவிட்டு அருகே இருந்த புல்லில் கையைத் துடைத்துவிட்டு இருந்த தண்ணீரைக் கொஞ்சூண்டு குடித்துவிட்டு விராலிப்புதரின் நிழலில் தலைசாய்த்து அந்த முகட்டையே பார்த்துக்கொண்டிருந்தேன். இன்னொரு கழுகும் அதே இடத்தில் இறங்கியது. சந்தேகமில்லை. கருங்கழுத்துப் பாறு தான். அதன் தாடைப்பையில் இரையைச் சேமித்து எடுத்து வந்திருக்கக்கூடும். பார்த்தவுடன் மகிழ்ச்சிப் பிரவாகம் என்னுள் எடுத்தது. பத்தாண்டு எதிர்பார்ப்பு நிறைவேறியது. உண்மையில் ஒருபுறம் மகிழ்ச்சியைத் தந்தாலும் மறுபுறம் இந்த இனம் பெருகிவருவதற்கேற்ப அவற்றின் இரைக்குத் தட்டுப்பாடு இல்லாமலும் கிடைக்கும் இரை அவற்றுக்கு ஆபத்தை ஏற்படுத்தாமலும் இருக்கவேண்டும் என்றும் மனதார விரும்பினேன்.
சத்தியமங்களம் பகுதியில் கூடு பார்க்கப்பட்டது குறித்து வனத்துறை உயரதிகாரிகளுக்கும் தெரிவித்தேன். அவர்களும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அத்துடன் இந்தக் கூட்டை யாரும் தொந்தரவு செய்யாவண்ணம் பாதுகாக்கவேண்டும் என்ற அக்கறையையும் வெளிப்படுத்தினர்.

இதுகாறும்  பாறுக் கழுகுப் பாதுகாப்பு மண்டலம் முதுமலையை மையமாக வைத்தே வரையப்பெற்றது. இனி சத்தியமங்களம் பவானிசாகரை மையமாக வைத்து வேலைத்திட்டத்தை முடுக்கவேண்டும் என்றும் உறுதியெடுத்துள்ளோம். பயணம் தொடர்கிறது...

பாறுக் கழுகுகள் செழித்தால் பாரும் செழிக்கும்

’பாறு’ எனச் சங்கத் தமிழிலும் இருளர் பழங்குடியினராலும் ’பத்’ எனத் தோடர் மக்களாலும் ‘ரணபத்து’ எனப் படுகு மக்களாலும் ’பிணந்தின்னிக் கழுகு’ எனச் சமவெளி மக்களாலும் அழைக்கப்படும் பறவை இனம் இறந்த விலங்குகளை உண்டு காட்டைத் தூய்மைப் படுத்துவதோடு நமக்கும் நோய்நொடி பரவாமல் காக்கும் அருமையான பணியினைச் செய்து வருகிறது. 
பாறுக் கழுகுகள் தற்போது மிகவும் அரிதாகி விட்டன. அவற்றை அழிவிலிருந்து மீட்க மண்ணின் மைந்தர்களோடும் பல்வேறு தரப்பினருடனும் இணைந்து வனத் துறை, கால்நடைத் துறை, மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை, மாவட்ட நிர்வாகம் ஆகியவற்றின் வழிகாட்டுதலோடு அருளகம் அமைப்பு முனைப்புடன் செயலாற்றிவருகிறது. 

 

கால்நடைகளுக்குப் பயன்படுத்திய வலி மருந்துகளின் வீரியமானது இறந்த மாட்டை உண்டபோது இவற்றை அடைந்து இப் பறவைகளின் அழிவிற்குப் பெரிதும் காரணமாய் அமைந்தது.

Vulture conservation

எனவே இப் பறவைகளுக்குத் தீங்கு செய்யும் கால்நடை மருந்துகளான டைக்குளோபினாக், அசிக்குளோபினாக், நிமுசிலாய்ட்ஸ், புளூநிக்சின், கீட்டோபுரோபேன் ஆகிய மருந்துகளைப் புறக்கணிக்கக் கோரியும் பாதுகாப்பான மாற்று மருந்துகளான மெலாக்சிகம்,  டோல்பினமிக் ஆசிட் மருந்துகளையும் சித்தா ஆயுர்வேதா, ஹோமியோ ஆகிய மருந்துகளைப்  பயன்படுத்தக் கோரியும் பல்வேறு வகையில் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். அத்துடன் இப் பறவைகளின் அழிவிற்குக் காரணமான விசம் தடவப்பட்ட சடலங்களை உண்ண நேர்வதால் அவை அழிவுக்கு ஆட்பட்டு வருவதைப் பற்றியும் இயற்கையாக இறந்த விலங்குகளைப் புதைக்காமலும் எரிக்காமலும் பாறுக் கழுகுகளுக்கு உணவாக்க வேண்டுகோள் விடுத்தும் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  

Vulture conservation

அதன் தொடர்ச்சியாக இன்றும் நாளையும் (08 & 09 -02-2023) பொம்மலாட்டம் மூலம் எப்பநாடு, கூக்கல் துறை, சின்னக் குன்னூர், உல்லத்தி ஆகிய ஊர்களில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளோம். நாம் வாழும் பகுதியைப் பாறுக் கழுகுகள் செழித்து வாழும் பகுதியாக மாற்ற ஆதரவு நல்குவீர். இறந்ததைத் தின்று இருக்கும் உயிரினங்களைக் காக்கும் பாறுக் கழுகுகள் செழிக்கட்டும்.

Egyptian vulture

‘மஞ்சள் முகப் பாறு’ எனப்படும் ‘Egyptian vulture’ கிருட்டினகிரி மாவட்டம் அஞ்செட்டிப் பகுதியில் பாறைப் பொந்தில்  பத்தாண்டுகட்கு முன்னர் வசித்து வந்த செய்தியை வன அலுவலர் திரு ஆனந்த் அவர்களும் ஓய்வுபெற்ற வனத்துறைப் பாதுகாவலர் திரு கணேசன் அவர்களும் என்னிடம் பகிர்ந்து கொண்டனர். தமிழகத்தில் சுழியம் நிலைக்குச் சென்றுவிட்ட மஞ்சள் முகப்பாறு தற்போதும் அங்கு வாழ்கிறதா என்று பார்த்துவரவேண்டும் என்ற ஆவல் சில ஆண்டுகளாகவே எனக்குள் இருந்தது.  அவ்வப்போது சேலம் பகுதியிலும் தமிழகத்தின் பிற பகுதிகளிலும் ஒன்றிரண்டு மஞ்சள் முகப்பாறுக் கழுகுகள் தென்படுவதும் எனது ஆர்வத்தைக் கிளறியபடி இருந்தது. ஒட்டுவாரொட்டி  எனப்படும் பெருந்தொற்றின் (Pandemic) தாக்கத்தால் அங்கு செல்வதற்கான வாய்ப்பு தள்ளிப்போய்க்கொண்டிருந்தது. ஒரு வழியாக அது சென்றவாரம் நிறைவேறியது. வனத்துறை அலுவலர் திருமிகு கார்த்திகேயனி அவர்கள் வழிகாட்டுதலுடன் வனத்துறை மருத்துவர் பிரகாசு அவர்கள் தலைமையில் பறவை அன்பர்கள் ஜோசப்ராஜா, மோகன்ராஜ், கார்த்திகேயன், ஜெயசங்கர் மற்றும் ஆகியோர் உடன்வந்தனர். ஆங்காங்கே நிறுத்திப் பறவைகளைப் பார்த்தபடி சென்றோம். தேன் பருந்து (Honey buzzard), லகுடு- (Kestrel), இராசாளி - Bonellis eagle, கருங்கழுகு - Black eagle ஆகியனவற்றையும் பார்க்கும் வாய்ப்புக் கிட்டியது. காட்டை ஊடறுத்துச் சென்ற பென்னாகரம் ஒகனேக்கல் சாலையின் வழியில் நரி ஒன்று தாவி ஓடியது. பல்லாண்டு இடைவெளிக்குப் பின்னர் நரி ஒன்றைப் பார்த்தது மகிழ்ச்சியைத் தந்தது. நரியின் ஊளைச் சத்தம் கேட்டு எவ்வளவு நாளாச்சு என்று பெருமூச்சும் கூடவே வந்தது. ஊளைச்சத்தம் எட்டாத தூரத்திற்குச் சென்றுவிட்ட கவலையுடன் அஞ்செட்டியை அடைந்தோம். பெரியதொரு பாறைக்கு முன் எங்களது வாகனம் நின்றது.  பாறையில் அமையப்பெற்ற பொந்தைக் காண்பித்து அங்குதான் மஞ்சள் முகப்பாறுகள் வாழ்ந்து வந்தன என உடன்வந்த வனக்காப்பாளர் கூறினார். தற்போது அவை அங்கு இருப்பதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. வெண்மை நிறப்படிவாகத் தென்படும் பறவையின் எச்சம் கூடத் தென்படவில்லை. அந்த இடத்தைப் புறா (Blue Rock Pigeon) தன் வசப்படுத்தியிருந்தது. சாலரி - குங்கிலி - Shorea roxburghii எனப்படும் மரக்கூட்டம் வழியாகப் பயணித்துப் பாறையின் மறுபக்கத்தை அடைந்தோம். பெங்களூரு நகரம் காட்டை நெருக்கித் திமிறி எழுந்து ஆக்ரமித்து வருவதை அவதானிக்க முடிந்தது. தலைக்கு மேலே வெண்தோள் பருந்து (Booted eagle) ஒன்று இரை தேடிக் காற்றில் சறுக்கியபடி பறந்து சென்றது. கூடவே நான்கு ஊர்ப் பருந்துகளும் Black kite வானில் வட்டமடித்தபடி பறந்தன.   கீழே இறங்கி வந்தோம், கோயில் வேலை மும்முரமாய் நடந்து கொண்டிருந்தது.  கோயில் பூசாரியிடம் திரு. பசவராஜ் (54) உரையாடியபோது, நான்கு ஆண்டுகட்கு முன்புவரை இங்கு மஞ்சள் முகப் பாறுக் கழுகு இருந்தது எனச் சொன்னார்.  எனக்கு மூளையில் சிறு பொறி தட்டியது. இரை ஏதும் இங்கு இல்லாததால் இவை இடம்பெயர்ந்திருக்கலாம். தற்போது அவை பெங்களூரு அருகிலிருக்கும் இராமதேவர்பெட்டாவுக்கு இடம்பெயர்ந்திருக்கலாம் என்று எனக்குத் தோன்றியது. அந்த இடத்தில் இவற்றின் உறவினர்கள் வசித்து வருவதை நான்கு ஆண்டுகட்கு முன்னர் அங்கு சென்றிருந்தபோது பார்த்திருக்கிறேன். மேலும் இங்கிருந்து அந்த இடம் வான்வழியாகச் சென்றால் சுமார் 30 கி,மீட்டர் தூரம் தான் இருக்கும். இந்தத் தொலைவு கழுகைப் பொருத்தவரை கூப்பிடு தூரம் தான். 

Egyptian Vulture Egyptian Vulture Egyptian Vulture

 Egyptian Vulture Egyptian Vulture

இயற்கையாக இறக்கும் காட்டுயிரினங்கள் புதைக்கப்படுவதும் எரிக்கப்படுவதும் தொடர்கதையாக இருக்கும்வரை அவை மீண்டு வரும் என்பது கானல் நீர்தான். உணவில்லாத இடத்தில் அவற்றுக்கு என்ன வேலை?. இரண்டு நாட்களுக்கு முன்னர் யானை ஒன்று இறந்து விட்ட செய்தியை அறிந்தோம். ஒருவேளை அங்கு சென்று பார்த்தால் அவற்றை உண்ண ஏதாவது வருவதற்கு வாய்ப்பிருக்கலாம் என்ற நப்பாசை மேலிட்டது. அடுத்த நாள் அங்கு சென்று பார்க்கலாம் என முடிவெடுத்து அதிகாலையில் கிளம்பி யானையைக் கிடத்திய இடத்தை அறிந்து அங்கு சென்று பார்த்தபோது, எங்களுக்குச் சோகமே மிஞ்சியது. ஆம் அதுவும் எரிக்கப்பட்டுப் பாதி எரிந்து கொண்டிருந்த சிதையைப் பார்த்து வருத்தம் தான் மேலிட்டது. யானையின் சடலத்தை உண்ணவந்த புழுக்களும் அந்தத் தீயில் எரிந்து சாம்பாலாயின. ஒரு மிகப்பெரிய உயிர்ச் சுழற்சியைத் தீயிலிட்டுக் கருக்கிவிட்டனர். இந்த அவலப்போக்கை மாற்ற வனத்துறை முழுமனத்தோடு ஒத்துழைத்தால் தான் உயிர்ச்சுழற்சியை மீட்க முடியும். 

தீவைத்து எரிப்பதை நியாயப்படுத்துவதற்காக, யாரேனும் விசம் வைத்துவிடுவார்கள், கெட்ட நாற்றமெடுக்கிறது, யானையின் எலும்பை யாராவது திருடிச் சென்று விடுவார்கள், நோய் பரவும் என்பன போன்ற காரணங்கள் அடுக்கப்படுகின்றன. இவற்றை நாம் மறுக்கவில்லை. ஆனால் முழுப் பூசணிக்காயையும் சோற்றில் மறைப்பது போல இறந்த யானையைப் புதைப்பதோ எரிப்பதோ வன்முறையான செயல் என்றே தோன்றுகிறது.  நல்ல நல்ல வனத்துறை அலுவலர்கள் இருக்கும்போதே இப்படி நடக்கிறது என்றால் யாரிடம் போய் முறையிடுவது. இந்த வருத்தம் மேலிடப்  புத்தாண்டில் இது குறித்துத் தொடர் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் உறுதி எடுத்துக் கொண்டு அவ்விடத்தை விட்டுக் கிளம்பினோம். 

அடுத்ததாக ஒரு பெரிய குத்துக்கல் பாறை ஒன்று இருக்கும் இடத்தை நோக்கி எங்களது வாகனம் சென்று நின்றது. தொலைநோக்கி வழியாக அளவளாவினோம். பாறையின் பிளவில் ஒரு இடத்தில் கொம்பன் ஆந்தை உட்கார்ந்து எங்களை நோட்டமிடுவது போல இருந்தது. அதை நீண்ட நேரம் பார்த்து இரசித்துக் கொண்டிருந்தோம். அரை மணி நேரம் ஆகியிருக்கும். திடீரென ஒரு ஐயம் ஏற்பட்டது. அது உண்மையிலேயே ஆந்தை தானா அல்லது உரு மாறு தோற்றப்பிழையா என்று. தொலைநோக்கியை முடுக்கினோம். வைத்தகண் மாறாமல் பார்த்தபோது இவ்வளவு நேரம் நாம் பார்த்து இரசித்தது ஒரு பாறையின் தோற்றமே அப்படி அமைந்திருக்கிறது எனத் தெரிந்து எங்களுக்குள் சிரித்துக்கொண்டே இடத்தை விட்டு நகர்ந்தோம்.

செல்லும் வழியில்,  ‘உரிகம்’ என்ற ஊரின் பெயர் கண்ணில் பட்டது. இந்த ஊர் ‘உரிகம் புளி’ என்ற அடைமொழியுடன் எனக்குத் தொண்ணூறுகளில் அறிமுகமாகி இருந்தது.  ‘புளி’ என்றால் புளியமரத்தினைக் குறிக்கும். அது என்ன ’உரிகம் புளி’ என்று வினவியபோது, உரிகம் என்பது அன்றைய தர்மபுரி மாவட்டத்தில் அமையப்பெற்ற ஒரு ஊர் எனவும் அந்த ஊரில் காணப்பட்ட ஒரு புளியமரம் நல்ல விளைச்சலையும் திரட்சியான கனிகளையும் கொண்டது என்பதால்  அந்த மரத்திலிருந்து விதையும் ஒற்றுக் கன்றுகளும் உருவாக்கப்பட்டு ஊர்ப்பெயரைக் கொண்டு அந்த இரகம் அழைக்கப்பட்டது என்பதையும் அறிந்துகொண்டேன்.  150 வயதான பழமையான இம் மரத்திலிருந்து  கன்றுகள் உருவாக்கப்பட்டுத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பப்பெற்றது. அத்தகைய சிறப்புமிக்க அம் மரத்தைக் காணவேண்டும் என்ற ஆவல் எனக்கு இருந்தது. ஓரிரு முறை இந்த ஊருக்கு அருகாமையில் செல்ல நேர்ந்தபோதும் அம்மரத்தைப் பார்க்கும் வாய்ப்புக் கிட்டவில்லை. இந்த முறை, அந்த மரத்தைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. ஊர்க்காரர்கள் வழிகாட்ட  மரம் இருக்கும் இடத்தை அடைந்தோம். நிறையப் புளிய மரங்கள் ஆங்காங்கே இருந்தன. அருகாமையில் மாடு மேய்த்துக்கொண்டிருந்த பெரியவர் ஒருவர் பல்வேறு புளியமரங்களுக்கிடையே உரிகம் புளி எனக் காரணப்பெயர்பெற்ற மரத்தைச் சுட்டிக்காட்டினார். தூரத்திலிருந்து பார்க்கும்போது மரம் தளதளவென இருந்தது. ஒரு காய் கூடக் கண்ணில் படவில்லை. ஆனால் அதே வேளையில் அருகாமையில் காணப்பட்ட புளியமரத்தில் காய்கள் காய்த்துத் தொங்கிக்கொண்டிருந்தன.  என்ன காரணம் என்று மரத்திற்கு அருகாமையில் சென்று பார்த்தபோது, மரத்தின் வேர்களைச் சுற்றித் தண்ணீர் நின்று கொண்டிருந்தது. உபயம் மகாத்மா காந்தி 100 நாள் வேலைத் திட்டத்தில் கட்டப்பட்ட தடுப்பணை என்பது புரிந்தது.

தடுப்பணையை வடிவமைக்கும்போது இதை எல்லாம் பார்ப்பதில்லை என்பது வருத்தமான செய்தி. அருகில் ஒரு பாரம்பரியமிக்க மரம் இருக்கிறது. அதுவும் புளியமரம் வறட்சியில் வளரும் ஒரு மரம். அதற்குத் தண்ணீர் தேங்கினால் என்ன ஆகும் என்ற அடிப்படை அறிவு கூட இல்லாமல் இப்பணி அரங்கேறியுள்ளது என்பது வருத்தப்படவைத்தது. எங்கு எளிமையாக வேலை செய்யமுடியுமோ கட்டுமானப் பொருட்களை எளிதில் எடுத்துச் செல்ல முடியுமோ அங்குத் தடுப்பணை அமைத்துவிடுகிறார்கள். இந்த இடத்தில் புளிய மரத்தின் மேல்புறம் ஒன்று கீழ்புறம் ஒன்று என இரண்டு தடுப்பணைகள் அமைக்கப்பட்டிருந்தன என்று சொல்வதை விட இந்த மரத்திற்குக் கல்லறை கட்டியிருந்தனர் என்று சொல்லலாம். இன்னும் சில ஆண்டுகளில் பாரம்பரியமிக்க அந்த மரமும் பட்டுப்போய் விடும் என்பதை நினைத்துப் பார்த்தேன். ‘புளி  ஆயிரம் பொந்து ஆயிரம்’ என்ற பழமொழியும் பொய்த்துப்போவதை உணர்ந்தேன்.
இதேபோலக் காட்டுக்குள்ளும் தடுப்பணை அமைத்த இடங்களின் அருகே இருந்த பெரிய பெரிய மரங்கள் குறிப்பாக ஆற்றோரத்தில் நன்கு வளரும் நீர் மத்தி மரங்களும் பட்டுப்போகி விட்டதைக் கண்ணுற்றிருக்கிறேன். 

அடுத்ததாக நாங்கள் பிதிரெட்டி எனும் ஊரை நோக்கிச் சென்றோம். காரணம், அங்கு ஆசியாவிலேயே பெரியதொரு ஆலமரம் இருப்பதைக் கேள்விப்பட்டு அதைப் பார்க்கும் ஆவல் மேலிடக் கிளம்பினோம். பார்த்து உண்மையிலேயே வியந்தோம். சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் வியாபித்திருந்தது அந்த ஆலமரம். தனது தோட்டத்தை அம்மரத்தின் வளர்ச்சிக்கு ஒதுக்கிய விவசாயியை மனமாறப் பாராட்ட வேண்டும். புள்ளி ஆந்தைகளும், சாம்பல் இருவாட்சிப் பறவைகளும் கண்ணில்பட்டன. அந்த மரத்தையும் வழமைபோலக் காதலர்கள் விட்டுவைக்கவில்லை. தங்களது பெயர்களை மரத்தைக் காயப்படுத்திக் கீறி எழுதி வைத்திருந்தனர். 

அருகாமையிலிருந்த புளியமரத்தை நோக்கினேன். குரங்குக்கூட்டம் புளியந்தளிர்களையும் காய்களையும் கடித்து வாயில் அதக்கிக்கொண்டிருந்தன. வயல்களில் இருந்தக் கேப்பைக் கதிர்களைக் குரங்குகள் சில வாயில் அதக்கிக் கொண்டிருந்தன. அதைப் பார்த்துக்கொண்டே நகர்கையில் சற்றுத் தொலைவில் ஒரு மின்கம்பத்தில்  கருகி ஒரு குரங்கு செத்துத் தொங்கியபடி உயிரை விட்டிருந்தது. இதே போல காடுகளுக்குள் ஊடறுத்துச் செல்லும் மின்கம்பங்களில் மாட்டி எத்துனை எத்துனை விலங்குகள் இறக்குமோ. தெரியாது. நம் கவனத்திற்கும் வராதது. எனவே இருக்கின்ற மின்கம்பங்களை எல்லாம் மின்சாரம் தாக்கா வண்ணம் வடிவமைக்க வேண்டும். ஆறறிவு படைத்த மனிதர்கள் என்பதை மனச்சாட்சியுள்ள மனித குலம் நிரூபிக்க வேண்டுமெனில் இது போன்ற செயல்கள்மூலம் தான் காட்ட வேண்டும். மாலை மயங்கிக்கொண்டிருந்தது.  பறவைகள் தங்குமிடத்தை நோக்கித் திரும்பிக்கொண்டிருந்தன. வௌவால்கள் இரை தேடிப் பறக்க ஆரம்பித்தன. நிலவொளியில் அவற்றைப் பார்த்தபோது,  அந்தக் காட்சி உயிரினங்கள் பாதுகாப்பில் நாம் பயணிக்கவேண்டியது நீண்ட நெடுந்தொலைவு உள்ளது என்பதை உணர்த்தியது.

அன்புடன்,
சு.பாரதிதாசன்
செயலர், அருளகம்
உறுப்பினர், தமிழ்நாடு அரசு காட்டுயிர் வாரியம்
உறுப்பினர், பாறுக் கழுகுகள் பாதுகாப்புக் குழு, தமிழ்நாடு அரசு

International Vulture Conservation Day Awareness Program

Vulture Awareness programVulture Awareness Program

Egyptian vultures face a perilous life in state

Vulture conservation

Volleyball Tournament for Vulture Brigade members

Date: November 17-18, 2012
Venue: Anaikatty Village, Nilgiris District
Organisers: Arulagam and Ayyan Thiruvalluvar Youth Welfare Society, Anaikatty
Target group: Tribal Youth of Nilgiri District
Purpose: To spread awareness about endangered vultures and threat to vulture populations because of Diclofenac drug.
Medium: Volleyball Tournament
Funding / Collaboration: CEPF, Mrs. Ramadevi, Mr.K.John, Mr.Basavan, Mr.Bommarayan, Mr. Ravi, Mr. B.A. Eswaran, IDA, Kowmaram Suchila International School.

A District Level Volleyball Tournament was organised by Ayyan Thiruvalluvar Youth Welfare Society, Anaikatty on November 17 & 18, 2012 at Anaikatty Village, a remote tribal hamlet in Nilgiris.

Poet Bharathi and Vultures

Legendary poet ‘Subramania Bharathi’s and Vulture

Poet Bharathi

On the eve of the Centenary death anniversary of legendary poet and freedom fighter Subramania Bharathi, ‘Arulagam’ organisation commemorate his memory by linking with vulture conservation.

Poet Bharathiar was not only raised the voice for the nation but also for the nature, universe,  the birds, mountains…..etc..,

When poet Subramania Bharathi wrote a poem (“Muppadhu Kodi Mugamudaiyal…,) in 1920’s,  India had 300 million people and the number of vultures at that time in Indian landscape totalled more than 4 million. Just less than a hundred years later, our human population raced up to 1.3 billion. And the vultures?

Puppet Show - Vulture education and awareness program

Cattle owners are playing major role in conserving native breeds, prohibiting carcass poisoning, removing harmful drugs from the vulture food chain and leaving the safe carcasses to vultures. Arulagam is working to eliminate the harmful drugs totally from the vulture food chain and taking various steps to improve the status of vultures in Tamil Nadu. The organisation is also educating local communities about the importance of vultures and their role in ecosystem functioning.

Arulagam continuously engages local communities in various ways to identify and protect vulture nesting areas and its habitats with the guidance and support of the Tamil Nadu State Forest Department. As part of it, vulture conservation awareness programs through puppet show were organised by Arulagam at Kakkayanur and Burgur in Erode district on 27 and 28th April 2019 in association with Tamil Nadu Tribal Association and Sathyamangalam Environment and Wildlife Association (SEWA).

Vulture Book

Vulture Book

 

Page 1 of 3

logo

'Arulagam' was founded in 2002 as a non-profit organisation in honour and memory of Mr. Arulmozhi, who inspired many of his friends, including ourselves – the members of Arulagam – through his commitment to environmental conservation. We believe that regardless of its value to humanity, every form of life and its ecosystem is unique.

Newsletter

Subscribe to our newsletters to receive latest news and updates.
I agree with the Privacy policy