சிதடிப் பூச்சிகளின் சிம்பொனி

நீங்கள் காட்டுக்குச் சென்றிருக்கிறீர்களா? அங்கு விதவிதமான செடிகள், ஓங்கி வளர்ந்த மரங்கள், கலர்கலரான வண்ணத்துப் பூச்சிகள், பறவைகள், விலங்குகள், பூச்சிகள் எல்லாம் பார்க்க முடியும்.

அடிக்கடி காட்டுக்குச் செல்பவர்கள் அனுபவிக்கும் ஒரு விஷயம் இரவு நேரத்தில் பெரும் கச்சேரியைப் போன்று கூட்டங்கூட்டமாக ரீங்காரம் செய்வதை கேட்டிருக்கலாம். இந்த ரீங்காரமிடும் சிறு பூச்சி, ஈயைப் போன்ற அளவுடனே இருக்கும். ஆங்கிலத்தில் இப்பூச்சியின் பெயர் சிகாடா. தமிழில் சில்வண்டு என்றும் சிதடிப் பூச்சி என்றும் அழைக்கப்படும் அப்பூச்சியின் உலகத்துக்குள் கொஞ்சம் எட்டிப் பார்ப்போம். மலையும் மலை சார்ந்த இடமுமான குறிஞ்சி நிலங்களில் அதிகம் உலவும் இப்பூச்சிகள் மற்ற இடங்களிலும் காணக் கிடைக்கும். பெண் பூச்சிகள் மரத்தின் பொந்துகளில் முட்டையிடும்.

முட்டை ஒன்றரை மாதத்தில் பொரிக்கும். முட்டையிலிருந்து வெளிவரும் இளம்பூச்சி கீழே விழுந்து தரையில் குழி பறித்து உள்ளே சென்று தங்கிவிடும். எத்தனை நாட்களுக்கு? நாட்களல்ல, ஆண்டுகளுக்கு! பதினேழு ஆண்டுகளுக்குப் பின்னரே, மண்ணுக்குள் இருந்து வெளிஉலகுக்கு வரும். அதுவரை ஜாலியாக மரத்தினுடைய வேர்களின் முனைப் பகுதியில் போய் சாவகாசமாகத் தங்கி, தனக்குத் தேவையான உணவை வேரிலிருந்தே பெற்றுக் கொள்ளும். பதினேழு ஆண்டுகள் மண்வாசத்துக்குப் பிறகு வெளியே வரும் பூச்சிகள் எத்தனை ஆண்டுகள் உயிர் வாழ்கிறது தெரியுமா? ஆண்டுகளல்ல, நாட்கள்! வெறும் ஒரு வாரம் மட்டுமே. அதிலும் பெரும்பாலான நேரம் இனப்பெருக்கம் செய்வதிலேயே கழித்து விடும். வெவ்வேறு அம்மாக்களின் முட்டைகளிலிருந்து வெளியே வந்த பூச்சிகள் எல்லாம் சொல்லி வைத்தது போல 17 ஆம் ஆண்டிலோ அல்லது 13 ஆம் ஆண்டிலோ வெளியுலகுக்கு வருவது ஏன் என்று ஆராய்ச்சியாளர்கள் மண்டையைப் போட்டு குழப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

அந்தப் பூச்சிகள் ஏன் அந்த ஓசையை எழுப்புகின்றன தெரியுமா?

அவை உள்ளேயும் வெளியேயும் சவ்வை விரைவாகத் தள்ளி ஓசை எழுப்புகின்றன. சவ்வின் உட்புறம் உள்ள தசையை சுருக்கி விரிப்பதன் மூலம் இந்த சவ்வை அசைக்கின்றன. இந்தத் தசை விநாடிக்கு நூறு முறைகூட சுருங்கி விரியும்.

அடிவயிற்றில் உள்ள மத்தளம் போன்ற சவ்வை விரைவாக அதிர வைத்து ஓசை எழுப்புகின்றன ஆயிரக்கணக்கான பூச்சிகள். ஆயிரக்கணக்கான பூச்சிகள் ஒரு சேர குரல் கொடுக்கும்போது, கூட்டுஇசை போலிருக்கும். புதிதாக மலைப்பகுதிக்குச் சென்றால், இந்த ஓசையின் அளவை வைத்தே காடு எவ்வளவு தொலைவில் இருக்கிறது என்பதைக் கூறிவிடலாம். நிறைய பூச்சிகள் ரீங்காரமிட்டால், அந்தக் காடு மனிதர்களின் கைகளில் இருந்து தப்பி, தொந்தரவில்லாமல் இருக்கிறது என்று அர்த்தம். குறைவாகக் கேட்டால், காடு அழிந்து வருகிறது என்று பொருள்.

அமைதிப் பள்ளத்தாக்குப் போன்ற ஒரு சில அடர்ந்த காடுகளில் மட்டும் இந்தப் பூச்சிகளின் ஓசை கேட்பது இல்லை. அதனால்தான் அந்தக் காடுகளுக்கு அமைதிப் பள்ளத்தாக்கு என்று பெயர் வந்தது.

பொதுவாக, இணை சேர்வதற்காகவே ஆண் பூச்சிகள் பெண் பூச்சிகளைக் கவர்வதற்காக இந்த ஓசை எழுப்புகின்றன. இணைசேரும் காலம் முடிந்ததும், மரப்பொந்தில் சென்று முட்டையிடும். முட்டை பொரித்து வெளி வந்தவுடன் இளம்பூச்சி, டாடா காட்டிவிட்டு மண்ணுக்குள் சென்று விடும். அப்புறமென்ன, பதிமூன்று, பதினேழாவது ஆண்டில்தான் தங்கள் நிலவாசத்தை முடித்துக் கொண்டு வனவாசத்துக்கு வரும், வெறும் 7 நாள் ஆயுசுக்காக...

சாக்லேட் திங்க ஆசையா?

குழந்தைகளே! அம்மாவிடம் அடம் பிடித்து காசு வாங்கியவுடன் என்ன செய்வீர்கள்? கடைக்கு ஓடி கண்ணாடிக் குடுவைக்குள் இருக்கும் கண்ணைப் பறிக்கும் வண்ணக் கலரில் உள்ள சாக்லேட்டைத் தானே வாங்குவீர்கள். அந்த வண்ணக் கலர் பிளாஸ்டிக் காகிதத்தையா உண்கிறீர்கள்? இல்லை, உள்ளே உள்ள சாக்லேட்டைத் தானே சாப்பிடுகிறீர்கள்.

ஏன் வெறும் 3 கிராம் எடை கொண்ட சின்ன சாக்லேட் துண்டுக்கு கலர்கலராய் 3 வகை உறைகள் தெரியுமா? எல்லாமே நம்மளை ஏமாற்றத்தான். நாம் அந்த சாக்லேட் உறைக்கும் சேர்த்துத்தான் காசு கொடுக்கிறோம் என்பதை மறந்துவிடக் கூடாது. சாக்லேட்டை வாங்கிய உடனேயே எங்கே அதைப் பிரிக்கிறோமோ அங்கேயே விட்டெறிந்து விடுகிறோம் இல்லையா? நீங்கள் விட்டெறிந்த அந்த உறையை, குப்பையை உங்கள் வயதை ஒத்த ஏழைச் சிறுவர், சிறுமிகள் பொறுக்கி எடுத்துச் செல்வதைப் பார்த்திருக்கிறீர்களா? அவர்கள் அதை என்ன செய்கிறார்கள்? உடைந்த கண்ணாடி, காகிதம், பிய்ந்த செருப்பு, பிளாஸ்டிக் பை இவற்றை பழைய பொருட்கள் வாங்கும் கடையில் விற்றுவிடுவார்கள். அதன் மூலம் அவர்களுக்கு கொஞ்சம் பணம் கிடைக்கிறது.

சரி, அந்த சாக்லேட் உறையை யாரும் பொறுக்காமல் விட்டால் என்ன ஆகும்? காற்றடிக்கும் திசையில் எல்லாம் பறந்து நாம் நடக்கும் பாதையெல்லாம் இறைந்து கிடப்பதைப் பார்த்திருக்கிறீர்களா? பிளாஸ்டிக் பை, பிளாஸ்டிக் பொருட்கள் மண்ணோடு மண்ணாக மக்காமல், அப்படியே கிடந்து நிலத்தை பாழ்படுத்திக் கொண்டிருக்கும். அப்படியில்லாத நிலையில், சாக்கடையில் விழுந்து அடைத்துக் கொள்ளும். பிறகு சுத்தம் செய்யும்போது ஆற்றில் சேர்ந்து பின்னர் கடலுக்குச் சென்றுவிடும். இதனால் எந்தப் பிரச்னையும் இல்லை என்று தானே நினைக்கிறீர்கள்? அதுதான் இல்லை. அந்த சாக்லேட் தாளை மீன்கள் சாப்பிட்டுவிட்டு வயிற்றில் சிக்கி இறந்து போகவும் நேரலாம்.

உங்கள் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் எல்லாம் ஒரு நாளைக்கு ஒரு சாக்லேட் தின்றுவிட்டுத் தூக்கி எறியும்போது எத்தனை பிரச்னைகள் ஏற்படும்? உங்கள் ஊரில், ஏன் இந்தியாவிலுள்ள அனைத்து சிறுவர், சிறுமியரும் சாக்லேட் தின்றுவிட்டு உறையை தூக்கி எறிந்தால் ஏற்படும் பிரச்னை எவ்வளவு பெரியது. எவ்வளவு குப்பைகள் சேரும். அதெல்லாம் சாக்கடையில் விழுந்தால் சாக்கடை முழுமையாக அடைத்துக் கொள்ளும், இல்லையா. பிறகு வீட்டைச் சுற்றி சாக்கடை தண்ணீர் தேங்கி நிற்கும். துர்நாற்றத்தையும், கொசுத் தொல்லையையும் பொறுத்துக் கொள்ள முடியாது. நிம்மதியாக படிக்க முடியாது, சாப்பிட முடியாது, நிம்மதியாக தூங்கவும் முடியாது. சரி, அத்தனை குப்பையும் கடலில் கலந்தால், எத்தனை மீன்கள், உயிரினங்கள் சாகும்? மற்றொரு உயிர் அழிவதை நாம் விரும்புவதில்லை, இல்லையா.

சரி, அப்படியானால் நாம் என்ன செய்ய வேண்டும்?

குப்பைகளை கண்ட இடத்தில் போடாமல், குப்பைத் தொட்டியில் போடப் பழக வேண்டும். நீங்களே அட்டைப் பெட்டியில் குப்பைத் தொட்டி செய்து, அதில் பழைய காகிதம், பிளாஸ்டிக், கண்ணாடி பாட்டில் போன்ற வீட்டில் தேவைப்படாத பொருட்களைச் சேகரித்து விற்கலாம். அதில் கிடைக்கும் பணத்தை நோட்டு வாங்கவோ, புத்தகம் வாங்கவோ பயன்படுத்திக் கொள்ளலாம். அப்பா, அம்மாவும் பாராட்டுவார்கள்.

இனிமேல் காசு கிடைக்கும்போது, சாக்லேட் வாங்குவதற்கு பதிலாக பழங்களைச் சாப்பிட்டால் உடலும் ஆரோக்கியமாக இருக்கும். அவற்றின் தோலும் எளிதில் மக்கிப் போகும்.

 

வலசைப் பறவைகளுடன் சில நாட்கள்

வலசைப் பறவைகளுடன் சில நாட்கள்

கடல் ஆமையின் கதை

ஆயிஷா டீச்சரின் வரவை ஆவலுடன் எதிர்பார்த்தபடி இருந்தனர் மாணவர்கள். வழக்கமான புன் முறுவலுடன் கலகலப்பாய் வகுப்பறைக்குள் நுழைந்தார். "இன்று ஆமைகளைப் பற்றி பேசுவோமா" என்று கேட்டு முடிக்கும் முன்பே "ஆமைல எத்தனை வகை டீச்சர்" என்று எதிர்கேள்வி கேட்டாள் இனிதா!

"தரைல இருத்தா நில ஆமை, ஆத்துலயோ, குளத்திலியோ இருந்தா நன்னீர் ஆமை, கடல்ல இருந்தா கடலாமை" என்று டீச்சரை முந்திக் கொண்டு பாலு பதில் சொன்னான்.

"சரியாச் சொன்ன பாலு!" என்று டீச்சர் உற்சாகப்படுத்தவும் பாலு முகத்தில் பூரிப்பு.

"இந்த மூணு வகைல எந்த வகையை மீனவ மக்களின் குழந்தைகள் அதிகம் இருந்தாலும் கடலாமைல இருந்தே ஆரம்பிக்கலாம் என டீச்சர் ஒத்துக்கொண்டார். "நம்ம கடல் பகுதியில் ஐந்து வகை ஆமை இருக்கு. அதுல நீங்க எதெல்லாம் பார்த்திருக்கீங்க?" என்றார் ஆயிஷா டீச்சர்.

Hawksbill Sea TurtleOlive Ridley Sea Turtleஉடனே அமுதன் "டீச்சர் நேத்து நாங்க கடற்கரைல கபடி விளையாடும் போது ஆமை ஓடு கிடைச்சது. அப்புறமா அதைக் கொண்டுபோய் எங்க தாத்தா கிட்ட காண்பிச்சேன். அவரு இது அலுங்கு ஆமை ஓடுனு சொன்னாரு" என்று கூறியவாறே பையில் துளாவி அந்த ஓட்டை எடுத்துக் காண்பித்தார். அவ்வோடு பழுப்பு, செம்பழுப்பு, கருப்பு, வெளுப்பு என்று ஓவியம் போல இருந்தது. இதை மூக்குக் கண்ணாடி சட்டம், நகைப் பெட்டி செய்யுறதுக்கு வாங்கிட்டு போவார்கள் என்று தாத்தா சொன்ன தகவலையும் சேர்த்தே சொன்னான். "அருமையாய்ச் சொன்னாய் அமுதா" என்று சொல்லி விட்டு ஆங்கிலத்தில் Hawksbill Sea Turtle எனவும், அறிவியல் பெயராக Eretmochelys imbricalta எனவும் அழைக்கப்படும் இந்த ஆமை ஆடம்பர பொருட்கள் செய்வதற்காகவும் இறைச்சிக்காகவும் சகட்டு மேனிக்கு சாகடிக்கப்படுவதாகவும் கவலையுடன் ஆயிஷா டீச்சர் தெரிவித்தார்.

"சரி வேற ஆமை பேரு சொல்லுங்க" என்று டீச்சர் கேட்க "பஞ்சல் ஆமை" என்றாள் மஞ்சு. "திருநெல்வேலி மாவட்டத்தில் பெருமணல் என்கிற ஊருக்கு அருகில் உள்ள பஞ்சல் எனும் ஊரில் முட்டையிட்டு செல்வதால் இந்த பேரு வந்தது மற்ற கடலோர மாவட்டங்கள்ல இதைப் பங்குனி ஆமைனும் சொல்வாங்க. காரணம் பங்குனி மாதத்தில் தான் இவை குஞ்சு பொரித்து கடலில் சங்கமமாகும். ஆங்கிலத்தில் Olive Ridley Sea Turtle (ஆலிவ் ரிட்லினும்) அறிவியல்ல Lepidochelys olivacea னும் சொல்றாங்க" என டீச்சர் சொல்லி முடிக்கும் முன்பே "கிறிஸ்துமஸ் சமயத்துல பஞ்சல் ஆமை நம்ம கடற்கரைப் பக்கம் முட்டையிடுது டிச்சர். எங்க தாத்தா போன வருடம் நூற்றிப்பத்து முட்டைகளை வாளியில் போட்டு எடுத்து வந்தார். நாங்க அத ஆம்லெட் போட்டு சாப்பிட்டோமே" என்றான் பெஞ்சமின். "அட சாப்பாட்டு ராமா! இப்படி முட்டைய திண்ணிங்கண்ணா கடல்ல எப்படி ஆமை இருக்கும்" என்று வெகுண்டாள் ஓவியா. "ஆமாம் மாணவச் செல்வங்களே! ஆயிரம் முட்டைகளில் ஒன்றுதான் பெரிதாகும் வாய்ப்பு கிட்டுகிறது. ஏனையவை இயற்கை எதிரிகளாலும் மனிதத் தொந்தரவுகளாலும் அழிய நேரிடுகிறது."

"இன்னும் இதைப் பற்றி சுவாரசியமான தகவல் சொல்லவா?" என்று கோட்டார் டீச்சர். "இந்த ஆமை எந்த இடத்தில் பிறந்ததோ அந்த இடத்தைத் தேடி வந்து அதே கடற்கரையில் வந்து முட்டையிடும். முட்டை இடும்போது அழுமாமே டீச்சர்" எனறு கேட்டாள் எழிலரசி. "ஆம். தன் உடலில் அதிகபடியஅக சேர்ந்துள்ள உப்பை அகற்றுவதற்காகவும் குழி தோண்டும் போது கண்ணில் படும் மணலை வழிந்தோடச் செய்வதற்காகவும் இப்படி அழுகின்றன என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்" என்று பதிலளித்த டிச்சர்.

Leatherback Sea Turtle"சரி அடுத்து என்ன வகை ஆமை?" என்று கேட்க "எலி, ஆமை" என்றாள் தேன் மொழி. "பூனை ஆமை" என்றாள் செல்வி. "எனக்கு ஆமை வடைதான் டீச்சர் தெரியும்" என்றான் கபிலன்.

"பூனை ஆமையெல்லாம் இல்லை. எலி ஆமைதான் இருக்கு. இதோட உடம்புல ஓடுக்கு பதிலா கடினமான தோலாலும், எலும்பாலும் உறுதியாய் மூடியிருக்கும். ஆங்கிலத்தில் Leatherback Sea Turtle னும் அறிவியலில் Dermochelys coriacea னும் அழைக்கப்படும் இவை இழுது மீன் எனப்படும், சொறி மீனை விரும்பி உண்ணும்" என்று பதில் அளித்த டீச்சர் "அடுத்து என்னவகை?" என்று கேட்க "ஓங்கில் ஆமை" என்றான் கரிகாலன். Green Sea Turtle"ஆம். இதை ஆங்கிலத்தில் ஆங்கிலத்தில் Green Sea Turtle னும் அறிவியலில் Chelonia mydas னும் என அழைக்கின்றனர். இதை வைத்து இது பார்க்க பச்சை வண்ணமாய் இருக்கும் என்று கருதிவிடக் கூடாது. இதனுடைய ஊன் கொழுப்பு பச்சை வண்ணமாய் இருக்கும். சரி இன்னொரு வகை என்ன?" என்று கேட்டு முடித்தார். வகுப்பே அமைதியாய் இருந்தது. "பெருந்தலை ஆமை" என்ரு சன்னமாக கடைசி பெஞ்சிலிருந்து குரல் வந்தது.

"யாரது அன்பரசனா? பெருந்தலை ஆமை என்று சொன்னது சரியாகத்தான் சொன்னே" என்று பாராட்டினார். டீச்சர். "இந்த ஆமையின் தலை பெரியதாய் இருப்பதால ஆங்கிலத்தில் Loggerhead Sea Turtle னும் அறிவியலில் Caretta caretta னும் அழைக்கப்படுகிறது" என்றார்.

Loggerhead Sea Turtle"ஆமை எத்தனை வருடம் உயிர்வாழும் டீச்சர்" என்று கேட்டான் பால்வண்ணன். "சுமார் முன்னூறு வருடங்கள் வரைகூட வாழும். இத்தனை வருடங்கள் வாழ இந்த ஆமை பல்வேறு வகை எதிரிகளிடமிருந்தும் குறிப்பாக மனிதர்களிடமிருந்தும் தப்பவேண்டி இருக்கும்!" என்று கூறினர் டீச்சர்.

"நாம் வீதியில் விட்டெறியும் பிளாஸ்டிக்கை இழுது மீன் என நினைத்து விழுங்கி விடுவதால் இரைப்பையில் மாட்டி சாவைத் தழுவுகின்றன. இந்த ஆமையை உணவாகக் கொள்ளும் வேறோரு மீன் இதை உண்ணும்போது சங்கிலித் தொடர் போல அதையும் பாதிக்கிறது" என்றார் டீச்சர்.

"டீச்சர் பஞ்சல ஆமை நம்ம ஊரைத் தவிர வேற எங்கெல்லாம் முட்டையிட வரும்?" என்று கேட்டான் பூங்குன்றன். "ஆள் அரவமற்ற மனிதத் தொந்தரவற்ற கடற்கரைப் பகுதியைத் தேர்ந்தெடுத்து முட்டையிடும். நம் மாநிலத்தில் நாகப்பட்டினம், கோடியக்கரை உள்ளிட்ட பகுதியிலும், திருநெல்வேலி மாவட்டத்தில் இடிந்த கரை, விஜயதாழை, பெருமணல், பஞ்சல் உள்ளிட்ட பகுதிகளிலும் முட்டையிட வருகின்றன. தவிர இவை கூட்டம் கூட்டமாக வந்து முட்டையிடும் இடங்கள் உலகில் ஆறு உள்ளன. அதில் மூன்று இந்தியாவில் ஒரிசா மாநிலத்தில் உள்ள ககிர்மாதா, ருசிகுலா, தேவிஆறு முகத்துவாரம் ஆகும்.

இன்னும் ஒரு ஆச்சரியமான விசயத்தை சொல்லவா. முட்டையிடப்பட்ட இடத்திலுள்ள வெப்பநிலை 28 டிகிரி செலிசியசுக்கு அதிகமாக இருந்தால் அம்முட்டைகள் பெண் ஆமையாகவும், அதற்கு குறைவான் வெப்பநிலையில் ஆண் ஆமையாகவும் உருவெடுக்கின்றன" என்று டீச்சர் செல்லவும் "அப்படினா கோழி முட்டையிலும் இப்படி வெப்ப் நிலையை மாற்றினால் கோழியாகவும் சேவலாகவும் பிறக்குமா?" என் கண்ணன் கேட்கவும் அனைவரும் சிரித்தனர். "இதப்பத்தி நான் தெரிந்து கொண்டு இன்னொரு நாள் சொல்றேன் என டீச்சர் கூறினார்.

"கடல் ஆமைகளை பாதுகாக்க அரசும் முனைப்பு காட்டுது. ஆனால் அது மட்டுமே போதாது. சென்னையில பள்ளி கல்லூரி மாணவர்கள் சிலர் தன்னார்வமா ஆமை முட்டைகளை பொரிக்கிற வரைக்கும் பாதுகாப்பான இடத்தில் வைத்து குஞ்சுகளை கடலுக்குள்ள விடுறாங்க. இது போல மற்ற இடங்களிலும் செஞ்சா நல்லா இருக்கும்மில்ல" என்று ஒரு கேள்வியை முன்வைத்து டீச்சர் அன்றைய உரையாடலை முடிக்க ஆம் என அனைவரும் ஒரே குரலில் ஆமோதித்தனர்.

முதுபெரும் காட்டுயிரியலாளர் ஜே.சி. டேனியல்

முதுபெரும் காட்டுயிரியலாளர்

நாட்டின் முதுபெரும் காட்டுயிரியலாளர் ஜே .சி. டேனியலுக்கு கடந்த மாதம் 80 வயது ஆனது. சர்வதேச அளவில் 'ஜே.சி.' என்று அறியப்படும் ஜீவநாயகம் சிரில் டேனியல் நாகர்கோவிலில் பிறந்தார். திருவனந்தபுரத்தில் வளர்ந்தார்.

டாக்குமென்டரி' எடுக்கும் பனியன் ஆலைத் தொழிலாளி

புலி நம் தேசிய விலங்கு. சுதந்திரம் வாங்குவதற்கு முன் 40,000 எண்ணிக்கையில் இருந்த புலிகளின் எண்ணிக்கை இன்று வெறும் 1,400. மயில் நம் தேசியப் பறவை. தமிழர்களின் வாழ்வோடு ஒன்றறக் கலந்த பறவை. வானவில் நிறங்களை தோகையில் பெற்ற மயில்களின் இன்றைய நிலை என்ன? புலிக்கு என்ன நேர்ந்ததோ, அதுவேதான் மயில்களுக்கும் நேர்ந்துள்ளது. விஷம் வைத்துக் கொல்லப்படும் அளவு மயிலின் நிலைமை இன்று மோசமாகிவிட்டது. மழை, மகிழ்ச்சி, கவர்ச்சி என்ற பல்வேறு விஷயங்களுக்கு குறியீடாகத் திகழும் இந்த அழகுப் பறவையின் அழிவை பதிவு செய்திருக்கிறது.

கோவை சதாசிவம்

'மாயமாகும் மயிலு' என்ற விவரணப் படம் (டாக்குமென்டரி). மயிலின் 4000 ஆண்டு வரலாறை முன்வைக்கிறது இப்படம். இந்தப் படத்தை எடுத்தவர் ஒரு பனியன் ஆலைத் தொழிலாளி, கோவை சதாசிவம். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க உறுப்பினர். நம் மண் மீதும், சுற்றுச்சூழல் மீதும் காதல் கொண்ட கவிஞராக அறியப்பட்டவர்.

சாயக் கழிவுக்கு பெயர்போன திருப்பூரில் பணிபுரிந்து கொண்டிருந்தார். அந்த நகரம் எதிர்கொண்ட சுற்றுச்சூழல் நெருக்கடிகளால் உந்தப்பட்டு 'பின்னல் நகரம்' என்ற சுற்றுச்சூழல் கவிதைத் தொகுப்பை வெளியிட்டார். 20 ஆண்டுகளுக்கு முன் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பெரும் கவனத்தை ஈர்க்காத நிலையில், அந்தக் கவிதைத் தொகுப்பு வெளிவந்தது. கவிதைப் பயணத்தை தொடர்ந்த சதாசிவத்துக்கு , படைப்பாற்றலை காட்சிக்கலையாக மாற்றும் விருப்பம் ஏற்பட்டது.

2006ம் ஆண்டு 'மண்' என்ற விவரணப் படத்தை எடுத்தார். சாயக்கழிவால் மண்ணில் உள்ள நுண்ணுயிர்கள் அழிவது, அதன் காரணமாக வேளாண்மை பாதிக்கப்படுவது தொடர்பாக அந்தப் படம் கவனம் செலுத்தியது. மயில்களை விஷம் வைத்துக் கொல்லும் நிகழ்வு பற்றிய செய்தியை படித்த பிறகு, அவற்றின் வாழ்க்கை பற்றி விரிவாகப் பதிவு செய்யும் எண்ணம் தோன்றிது. சுற்றுச்சூழல் சிந்தனை கொண்ட நண்பர்கள் உதவியுடன் மயில் பற்றி விவரணப் படத்தை எடுத்தார்.

மயில்களின் இன்றைய நிலைமை

நம்மைச் சுற்றியிருந்த கருஞ்சிட்டு, பொரிச்சிட்டு, தேன்சிட்டு போன்ற எத்தனையோ சிறிய பறவைகள் அழிந்துவிட்டன. கோவையில் உள்ள 72 வார்டுகளில் 52 வார்டுகளில் சிட்டுக்குருவிகள் இல்லை. பறவைகளின் அழிவுக்கு மயில் ஒரு குறியீடு. மயில் நமது பண்பாட்டுடன் நெருக்கமான உறவு கொண்ட ஒரு பறவை . காவடியாட்டம், மயிலாட்டம் போன்ற நடனங்கள், மயிலாடுதுறை, மயிலாப்பூர் போன்ற ஊர்ப் பெயர்கள், மயில்சாமி, மயிலாத்தாள், அன்னமயில் போன்ற நபர்களின் பெயர்கள் இதற்கு சில உதாரணங்கள். நம் வாழ்வுடன் கலந்திருந்த இப்பறவைகள் இன்று எதிரியாகப் பார்க்கப்படுகின்றன.

பயிர்களை சேதம் செய்வதாகக் கூறி, விவசாயிகள் மயில்களை விஷம் வைத்து கொல்கிறார்கள். மயில்கள் முட்புதர்களில் முட்டையிட்டு 28 நாட்கள் அடைகாக்கும். அதன் பிறகு குஞ்சுகளை 9 நாட்கள் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளும். இந்த கவனிப்பு இருந்தால்தான் மயில்குஞ்சு பிழைக்கும். முட்புதர்களை உறைவிடமாகக் கொண்ட மயில்கள் இன்று வாழ இடம் தேடி அலைகின்றன. மயில்களுக்கு உகந்த காடுகள் உறைவிடம் அழிக்கப்பட்டுவிட்டது. இயற்கையாகக் கிடைத்து வந்த உணவு அழிந்ததால், உயிர்பிழைக்க அவை வயல்களை நாடுகின்றன. இது மட்டுமின்றி விவசாயிகள் அடிக்கும் பூச்சிக்கொல்லி கலந்த தானியங்களாலும் பாதிக்கப்படுகின்றன.

அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடர்களுக்கு வந்து ஆராய்ச்சி செய்கிறார்கள். மற்றொருபுறம் நமது பாரம்பரியச் செல்வங்களுக்கு வெளிநாட்டினர் காப்புரிமை பெறுகின்றனர். நமது வளத்தைப் பற்றி விழிப்புணர்வை அதிகரிக்காவிட்டால், எஞ்சிய நமது பாரம்பரியச் செல்வங்களும் பறிபோகும். இதை கவனப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்துடன்தான் 'மாயமாகும் மயிலு' படத்தை எடுத்தோம். கோவை அருகேயுள்ள காக்காச்சாவடியில் 9 மயில்கள் விஷம் வைத்து கொல்லப்பட்டது தொடர்பாக வந்த பத்திரிகை செய்திதான், அது பற்றி விவரணப் படம் எடுக்கும் ஆர்வத்தைத் தூண்டியது. திருச்சி, பொள்ளாச்சி, கோவை ஆகிய பகுதிகளில் மயில்கள்-விவசாயிகள் இடையே மோதல் அதிகமாக உள்ளது.

பல்வேறு முனைகளில் இருந்து நெருக்கடிகளைச் சந்திக்கும் விவசாயிகள், உணவு தேடி வரும் மயில்களை கொன்றுவிடுகிறார்கள். மயிற்பீலியை தீயில் கருக்கி தேனில் குழைத்துக் கொடுத்தால் குழந்தைகளுக்கு சளி குணமாகும் . புரதம் மிக்க மயிலை வாட்டி எடுக்கப்படும் எண்ணெயால் மூட்டு வலி குணமாகும் என்றெல்லாம் மூடநம்பிக்கைகள் நிலவுகின்றன. இதற்காக நரிக்குறவர்கள் மயிலைச் சுட்டுப் பிடிக்கின்றனர். ஆனால் மயிலுக்கு எந்த மருத்துவ குணமும் இல்லை. கடந்த 20 ஆண்டுகளாகத்தான் மயில்கள் அதிகம் அழிக்கப்படுகின்றன. மயில்கள் சரணாலயமான விராலிமலையில் 8000 மயில்கள் இருந்ததாகக் கூறுகிறார்கள். இன்று எண்ணிவிடக் கூடிய அளவு அவை சுருங்கிவிட்டன.

கோவை கன்யா குருகுலப் பகுதியில் உருவான தொழிற்பூங்கா காரணமாக முட்புதர்கள் அழிக்கப்பட்டன. இதனால் 250 மயில்கள் அழிந்துவிட்டன. மயில்கள் பாதிக்கப்பட்டால் , அது உணவாகக் கொள்ளும் பாம்பு, பூரான், தேள் போன்றவை அதிகரிக்கும். இதனால் உணவுச் சங்கிலி பாதிக்கப்படுகிறது. பாம்புகள் அதிகரித்தால், அவற்றைக் கொல்வோம். அதைக் கொன்றால் எலியும், தவளையும் பெருகும். பல நோய்கள் அதிகரிக்கும். பறவைகளின் முக்கியத்துவத்தை சூழலியல் ஆராய்ச்சிகள் தெளிவாக எடுத்துரைக்கின்றன .

தாவரங்கள் இனப்பெருக்கத்துக்குத் தேவையான மகரந்தச் சேர்க்கை, விதை பரப்புதலில் பல்வேறு பறவைகள் மறைமுகமாக நமக்கு உதவி புரிந்து வருகின்றன. பறவைகள் அழிந்தால் தாவரங்கள் அழிந்துவிடும். இந்த படத்தை வெளியிட்ட பாரதியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் திருவாசகம், மயில்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க பரிந்துரைப்போம் என்றார்.

"சமீபத்தில் கோவை வந்த அறநிலையத் துறை அமைச்சர் பெரியகருப்பன், மருதமலை அடிவாரத்தில் நாலரை ஏக்கர் பரப்பில் உள்ள 300 மயில்களை பாதுகாக்க ரூ. 10 லட்சம் ஒதுக்கப்படும் என்று அறிவித்துள்ளார். சென்னை புத்தகக் கண்காட்சியில் இந்தப் படம் திரையிடப்பட்டது. பள்ளி, கல்லூரிகளில் இப்படத்தை திரையிட்டு வருகிறோம். அங்கு சூழலியல் பற்றி பேசவும் முடிகிறது. விவரணப் படங்களைத் திரையிட டிவி அலைவரிசைகள் நேரம் ஒதுக்கி ஆதரிக்க வேண்டும். திரு.காளிதாசன்-நண்பர்கள் ஏற்படுத்திய 'ஓசை' அமைப்பு மூலம் பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகிறேன். 'கொஞ்சும் மொழி கேட்போம்' என்ற தாய்த் தமிழ் பள்ளிகளுக்கான சூழலியல் பாடல் புத்தகத்தை எழுதியுள்ளேன்." என்கிறார் கவிஞர் சதாசிவம். தமிழில் காட்டுயிர் விவரணப் படமெடுக்கும் முயற்சியில் தடம் பதித்திருக்கிறீர்கள். அடுத்து?

'யானை-மனிதர்கள்' மோதல் பெருகிவிட்டது. சமீபத்தில் மூன்று யானைகள் ரயிலில் அடிபட்டு இறந்தன. உணவு, உறைவிடம் இன்றி அவை ஊருக்குள் வருவதும், கிணறுகளில் விழுந்து இறப்பதும் தொடர்கதையாகி வருகிறது. யானைகளின் அழிவு , காடுகள் பெருமளவு அழிவதன் எச்சரிக்கை மணி. யானைகள்-விவசாயிகள் மோதல் அதிகரிப்பது மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரின் அழிவை சொல்கிறது. யானைகளின் வீட்டை அபகரித்துக் கொண்டு, அவை வெளியே வராமல் மின்வேலியிடுவது இதற்குத் தீர்வல்ல. காடுகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை முதலில் அகற்ற வேண்டும். மலைத் தொடர் வரைமுறையன்றி அழிக்கப்படுவதால் ஆறுகள் வறண்டுபோகும். ஆறுகள் வறண்டுவிட்டால் நமது விவசாயம் பொய்க்கும். அடுத்ததாக யானைகள் -மக்கள் மோதலை மையப்படுத்தி விவரணப் படம் எடுக்கும் திட்டம் உள்ளது. இயற்கையை காப்பாற்றுவதால்தான், மனித இனத்தை காப்பற்ற முடியும் என்று உறுதியாக நம்புகிறேன்.' என்கிறார் சதாசிவம்.

குரங்கு நிபுணர் ஜேன் கூடால்

"மொழி இருந்தால் குரங்கும் அறிவாளிதான்" காட்டுயிர் திரைப்பட விழா ஒன்றுக்காக சமீபத்தில் குரங்கு நிபுணர் ஜேன் கூடால் சென்னை வந்திருந்தார் . 'விலங்குகள் பேசும்போது' என்ற அவரது படம் அந்த விழாவில் திரையிடப்பட்டது.

அவருடன் ஒரு பேட்டி

காடுகளில் உங்களால் மறக்க முடியாத ஓர் அனுபவம்?

அது ஒரு அற்புதமான தருணம். அடர் காட்டில் வாழும் ஒரு குட்டி சிம்பன்சி என்னை நோக்கி நகர்ந்து வந்தது. சற்று தூரத்திலிருந்த தாய் சிம்பன்சி, குட்டி என்னை நெருங்க அனுமதி கொடுத்து பேசாமல் இருந்தது. சாதாரணமாக விலங்குகள் தங்கள் குட்டிகளிடம் அந்நியர் யாரையும் நெருங்க விடுவதில்லை. அதுவே அவற்றின் இயல்பான தாய்மை-பாதுகாப்பு குணம். என்னை நோக்கி நகர்ந்து வந்த பிளின்ட் -டின் (அதற்கு நான் அப்படிப் பெயரிட்டிருந்தேன்) ஒளிரும் பெரிய கண்கள் என் கண்களை நோக்கின. பிறகு வாஞ்சையுடன் மெதுவாக எனது மூக்கை அது தொட்டது... சொல்லிக் கொண்டிருக்கும்போதே கூடாலின் கண்கள் அந்த நினைவுகளில் ஆழ்கின்றன.

குரங்குகளுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான முக்கிய வேறுபாடாக நீங்கள் எதை நினைக்கிறீர்கள்?

நமக்கும் குரங்குகளுக்கும் அறிவு ரீதியில் பெரும் இடைவெளி ஏற்படுவதற்கு மொழிதான் முக்கிய காரணம். மொழியின் மூலம் விஷயங்களை நாம் புரிந்து கொள்கிறோம். மொழியின் உதவியால் தகவல்களை எழுத்துகளைக் கொண்டு நினைவுகளாக பதிவு செய்து கொள்கிறோம். நாம் புரிந்து கொண்டதை அடுத்த தலைமுறைக்கு கடத்துகிறோம். மேலும் மொழி மூளை அளவிலேயே பல்வேறு விஷயங்களை பதிவு செய்கிறது. அடுத்தடுத்த தலைமுறை கூடுதல் அறிவுடன் பிறக்கிறது. குரங்குகளுக்கு மொழி இல்லாதது, அவற்றின் மூளை தொடர்ந்து வளர்ச்சியடையாமல் இருப்பதற்கு முக்கிய காரணம்.

குரங்குளிடம் இவ்வளவு நெருக்கமாகப் பழகுகிறீர்களே, அவற்றின் நோய் எதுவும் உங்களுக்குத் தொற்றிக் கொள்ளதா?

எனக்கு அப்படி எந்த பயமும் இல்லை. தொடக்க காலத்தில் சிறுத்தைகளைப் பார்த்து நான் பயந்திருக்கிறேன். எனது முதல் ஆராய்ச்சித் திட்டத்திற்காக சேர்த்து வைத்திருந்த பணம் வெறும் ஐந்து மாதங்களில் கரைந்துவிட்டது. அதுதான் என்னை மிகவும் பயமுறுத்தியது. ஆராய்ச்சியை தொடர முடியுமா என்ற சந்தேகத்தை எழுப்பியது. காட்டுயிர்கள் பயமுறுத்தக்கூடியவை அல்ல.

பிரபலமாக இருப்பதை நினைத்து பெருமைப்படுகிறீர்களா?

நான் ஒரு விஐபி எல்லாம் இல்லை. நான் நானாக இருப்பதையே முக்கியமாக கருதுகிறேன். நான் கூறுவதை மக்கள் கேட்கிறார்கள் என்பது ரொம்ப முக்கியம். பூவுலகை காக்க ஒவ்வொரு தனிநபரும் ஒவ்வொரு நாளும் செயல்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.

காட்டுயிர்களை பாதுகாக்கும் பணியில் இவ்வளவு தீவிரம் உங்களுக்கு எப்படி ஏற்பட்டது?

டான்சானியாவில் உள்ள கோம்பே சரணாலயத்திலோ , வேறு காட்டிலோ நான் ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறேன். அது உணர்வு எல்லோரையும் சென்றடைய வேண்டும். எல்லாம் பாதுகாக்கப்படவும் வேண்டும்...

வீட்டை மாற்றிய வண்ணத்துப்பூச்சி!

உடலில் வரிவரியாக பளிச்சென்ற வண்ணத்தில் இருக்கும் கம்பளிப் புழு, அதைவிட வனப்புமிக்க வண்ணத்துப்பூச்சியாக மாறுவதற்கு தன்னையே அழித்துக் கொள்கிறது. இந்த 'உருமாற்றம்', இயற்கையில் பொதிந்துள்ள எத்தனையோ ஆர்வத்தைத் தூண்டும் அம்சங்களில் ஒன்று மட்டுமே. சமீபத்தில் காந்தி கிராமம் சென்றிருந்தேன். அங்குள்ள நண்பர் ஒருவர் வீட்டில் தங்கியிருந்தேன். அந்த வீட்டுக்கு அழகான பெயர் உண்டு. பகலில் வேலைகளை முடித்துவிட்டு மாலையில் ஓய்வெடுக்கத் திரும்பும் இடம் என்று பொருள்படும் வகையில், 'அந்தி சாய்ந்த பிறகு' (Behind a Sunset) என்ற பெயர் வைக்கப்பட்டிருந்தது.

மின்சாரம் தயாரிக்கும் ஃபேன்!

 

பள்ளிக்கூடத்தில் இருந்து வீட்டுக்கு வந்த ஆயிஷா நேராக அடுப்படிக்குப் போனாள் . அங்கே அவள் அம்மாவும், அப்பாவும் சாயங்கால டிபன் தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர்.

பிரகாசமான புன்னகையோடு வந்த ஆயிஷாவைப் பார்த்த அவள் அப்பா, "இன்றைக்கு ஏதோ சந்தோஷமா விஷயத்தோட வந்திருக்க போலிருக்கே" என்றார். " ஆமா, ஆமா! இன்றைக்கு பள்ளிக்கூடத்துக்கு பாபு ஒரு பொருளை செய்து கொண்டு வந்திருந்தான். சீக்கிரம் வாங்க, உங்களுக்கும் காண்பிக்கிறேன். வீட்டில் காண்பித்தவுடன் திரும்பக் கொடுத்து விடுவதாக அவனிடம் சொல்லியிருந்தேன்" என்றாள் ஆயிஷா.

அம்மா, அப்பா அவளைப் பின்தொடர, புத்தகப் பையில் இருந்து பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட ஒரு காற்றாடியை வெளியே எடுத்தாள் ஆயிஷா. சிறுவர்கள் தென்னை ஓலையால் செய்து விளையாடும் காற்றாடியை போன்று சுழலும் வடிவத்தில் அது இருந்தது . தம்பி ஓடிவந்து பக்கத்தில் நின்று கொண்டு, அக்கா என்ன செய்யப் போகிறாள் என்பதை ஆவலான கண்களோடு பார்த்தான். ஆயிஷா இப்போது பையில் இருந்து சிறிய மோட்டார் ஒன்றை வெளியே எடுத்தாள் . அதில் மிகச்சிறியதாக, அலங்காரத்துக்குப் பயன்படுத்தப்படும் பல்பு ஒன்று பொறுத்தப்பட்டிருந்தது. அது ஒரு விளக்கு.

காற்றாடியின் நடுவில் இருந்த துவாரத்தில் மோட்டாரின் சுழலும் பாகத்தை கவனமாகப் பொருத்திய பிறகு , ஆயிஷா சொன்னாள், "ஃபேன் ஸ்விட்சை போடுங்க அம்மா" சுழலத் தொடங்கிய ஃபேனுக்கு நேராக ஆயிஷா , தன் கையில் இருந்த காற்றாடியைத் திருப்பினாள். காற்றாடி மெதுவாகச் சுழலத் தொடங்கியது. " அம்மா, அப்பா பல்பைப் பாருங்க, பல்பு எரியுது பாருங்க" என்று மகிழ்ச்சியோடு ஆயிஷா குதித்தாள். விளக்கு மெதுவாக மின்னிமின்னி ஒளியை அதிகமாகப் பாய்ச்சத் தொடங்கியது. "பரவாயில்லையே இது நல்ல தொழில்நுட்பமாக இருக்கே" என்றார் அப்பா. " இங்க பாருங்க அப்பா, பல நாடுகளில் மின்சாரம் உற்பத்தி செய்றதுக்கு, இது மாதிரி பெரியபெரிய காற்றாடிகளைப் பயன்படுத்துகிறார்களாம். எங்க டீச்சர் சொன்னாங்க தெரியுமா" என்றாள் உற்சாகமாக." அவங்க சொன்னது ரொம்பச் சரி" என்றார் அப்பா. " இந்த காற்றாடியை செய்து கொண்டு வந்ததற்கு பாபுவை டீச்சர் ரொம்பவே பாராட்டினாங்க.

நாமும் இது போல ஒரு காற்றாடியை செய்து வீட்டில் பொருத்தினால் என்ன அப்பா, மின்சாரம் இல்லாத நேரத்தில் இதில் இருந்து நமக்கு வெளிச்சம் கிடைக்கும் இல்லை. நிறைய நேரம் கரண்ட் கட் ஆகிப் போகுதே" என்று கேட்டாள். " அதற்கு இவ்வளவு சிறிய மோட்டார் எல்லாம் போதாது, ஆயிஷா. அது மட்டுமில்லாம அது நன்றாகச் சுழல நிறைய காற்றும் வேணுமில்லையா. அப்படி சுழல காற்றாடியை மிக உயரமான இடத்தில் பொருத்த வேண்டும்" என்று அம்மா சொல்ல, அது ஆயிஷாவுக்குப் பிடிக்கவில்லை. "அம்மா இதை இங்க வைக்கக்கூடாதுன்னு சொல்றாங்க, சரி, நான் எங்க பள்ளிக்கூடத்துல பெரிய காற்றாடியை வைக்க வேண்டும் என்று டீச்சர்கிட்ட சொல்லப் போறேன், பார்ப்போம்" என்றாள். அவளது யோசனையைக் கேட்டு அப்பாவும் அம்மாவும், சிரித்துக் கொண்டே, "சரி, சொல்லித்தான் பாரேன்," என்றார்கள். கீழே இருந்த காற்றாடியை எடுத்துக் கொண்டு பாபுவின் வீட்டுக்கு ஓடினாள் ஆயிஷா. தம்பிக்கு ஒன்றும் புரியவில்லை.

மேலே சுழன்று கொண்டிருக்கும் ஃபேனை பார்த்துக் கொண்டே, "இந்த ஃபேன் சுத்துனா எப்படி லைட் எரியுது. இதுல ஏதோ மாஜிக் இருக்கு" என்றான். " ஃபேனில் எந்த மாஜிக்கும் இல்லை. பிளாஸ்டிக் காற்றாடியில்தான் எல்லா மாஜிக்கும்" என்றார் அப்பா. " எல்லா குழந்தைகளுக்கும் தாங்களாகவே எதையாவது செய்து பார்க்கணும் என்று ஆசையிருக்கும். அப்படி அவங்களே செய்யுறதுதான் ஓலைக் காற்றாடி. சும்மா கையில் பிடித்துக் கொண்டால் அது சுத்தாது. காற்றாடியின் நடுவில் ஒரு குச்சியை பொருத்தி, குச்சியை பிடித்துக் கொண்டு ஓட வேண்டும். அப்போதான் சுழலும். காற்று நல்லா வீசினா, எதிர்பக்கத்துலகூட வேகமாகச் சுழலும். யாருடைய காற்றாடி அதிகமாகச் சுழல்கிறது என்று நண்பர்கள் குடுகுடுவென்று ஓடுவதை , இப்பவெல்லாம் நிறைய பார்க்க முடியறதில்லை. கல்வியின் சுமை குழந்தைகளை விளையாட்டில் இருந்து தள்ளி வைக்கிறது.

எத்தனையோ நாடுகள் இது மாதிரி பிரம்மாண்ட காற்றாடிகளை வைத்திருக்கிறார்கள், தெரியுமா?" என்று கேட்டார். பாபு வீட்டிலிருந்து திரும்பிய ஆயிஷாவும், தம்பியுடன் சேர்ந்து கொண்டு அப்பாவின் பேச்சை கவனிக்க ஆரம்பித்தாள். " அங்கெல்லாம் பல ஏக்கர் நிலங்களில் ஏராளமான காற்றாலைகளை அமைத்திருக்கிறார்கள். ஒரேயொரு வித்தியாசம்தான். இந்த பெரிய காற்றாடிகளின் உயரம் பத்து மாடிக் கட்டடத்தின் உயரம் இருக்கும். அதன் சுற்றளவையும், உயரத்தையும் மனசில் கொஞ்சம் கற்பனை செஞ்சு பாருங்க. காற்றாலைகள் அதிகமாக உள்ள பகுதிகளை காற்றாலை பகுதிகள் என்றும் சொல்வார்கள். இதன்மூலம் காற்றின் அதிவேக சக்தியை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கிறாங்க . சைக்கிள் சக்கரத்தால் டைனமோ சுழன்று லைட் எரிவது போல, காற்றாலையின் இறக்கைகள் சுழலும்போது பெரிய டைனமோக்கள் மூலம் மின்சாரம் தயாரிப்பதுதான் இதன் தொழில்நுட்பம்.

எப்போதும் காற்று வீசக்கூடிய இடங்களில்தான் காற்றாலைகளை அமைக்க முடியும். உயரம் குறைவான இடங்களில் காற்று குறைவாகவே வீசும். காற்றாடியின் உயரம் அதிகரிக்கும்போது, மரங்கள், கட்டடங்கள் காற்றை தடுத்து நிறுத்தாமல் இருப்பதால், உயரமான இடங்களில்தான் பலமான காற்று வீசுகிறது. இதற்காக பலம்வாய்ந்த உயரமான சிமெண்ட் தூண்கள், இரும்புத் தூண்கள் மீது காற்றாலைகளை அமைக்கிறார்கள். தென்னை ஓலையால் செய்யும் காற்றாடிக்கு நான்கு இறக்கைகள் இருக்கும். ஆனால் மின்சாரம் தயாரிக்கும் இந்த காற்றாலைகளுக்கு மூன்று இறக்கைகள் மட்டுமே இருக்கின்றன. தூண்கள் இருபது மீட்டருக்கு அதிக உயரமாக தயாரிக்கப்படும். தற்பொது பூமியில் இருக்கும் மிகப்பெரிய காற்றாலையின் உயரம் 200 மீட்டருக்கும் அதிகம். அதன் தூண்கள் மட்டும் 160 மீட்டர் உயரம். சுழலும் இறக்கை ஒவ்வொன்றின் நீளமும் 45 மீட்டர்.

Windmills - Tamil Nadu

ஜெர்மனியில் உள்ள லாஸ்ஸோ என்ற இடத்தில் இந்த மாபெரும் காற்றாலை கம்பீரமாக நின்று கொண்டிருக்கிறது. உலகில் உற்பத்தி செய்யப்படும் மொத்த மின்சாரத்தில் ஒரு விழுக்காடு , காற்றாலைகள் மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது. டென்மார்க்கில் 19 விழுக்காடு மின்சாரத் தேவையை காற்றாலைகள் மூலம் உற்பத்தி செய்கிறார்கள். காற்றாலை மின்சார உற்பத்தியில் ஜெர்மனி, அமெரிக்கா, ஸ்பெயின் நாடுகளுக்கு அடுத்து 4வது இடம் இந்தியாவுக்கு. அதிலும் தமிழகத்தில்தான் அதிக மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது," என்றார் அப்பா. " ஓ, அப்படியா" என்றார்கள் ஆயிஷாவும் அவள் தம்பியும். "

ஆமாம். இந்தியாவில் 8000 மெகாவாட் மின்சாரத்தை காற்றாலைகள் மூலம் தயாரிக்க முடிகிறது. அதில் மூன்றில் ஒரு பங்குக்கு மேல் தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது. காற்றாலைகளை இப்போதுதான் பயன்படுத்து கற்றுக் கொண்டிருக்கோம் என்று தப்பா நினைச்சுக்காதீங்க . 2,200 ஆண்டுகளுக்கு முன்பே காற்றாலைகளைப் போன்ற அமைப்பு இருந்திருக்கிறது. சிறப்பாகப் பயனளிக்கும் காற்றாலைகள் ஏழாம் நூற்றாண்டில் ஆப்கானிஸ்தானில் உருவாகின . அதற்குப் பிறகு காற்றை மிகச் சிறப்பாகப் பயன்படுத்திக் கொண்டது டென்மார்க்தான். இன்றும்கூட அவர்கள்தான் காற்றை அதிகமாக பயன்படுத்தி மின்சாரம் தயாரித்து வருகிறார்கள்.

மின்சாரம் உற்பத்தி செய்வதற்கு தற்போதுள்ள மாற்று வழிகளில் மிகச் சிறந்தது காற்றாலைகள்தான் . அதுமட்டுமில்லாம, இது சுற்றுச்சூழலை மாசுபடுத்துவது இல்லை. இருந்தாலும் காற்றாலைகளில் அடிபட்டு பறவைகள் இறந்து போவதும் நடக்கிறது" என்றார் அப்பா. "இது கவலை தரும் அம்சம்தான் என்றாலும், காற்றாலைகளால் நிறைய நன்மைகள் கிடைக்கிறது என்று எங்க டீச்சரும் சொன்னாங்க அப்பா" என்றாள் ஆயிஷா. " அதில் எந்தச் சந்தேகமும் இல்லை"

மலையாளம் வழி தமிழில் : -

நன்றி : யுரேகா மலையாள இதழ்

Page 11 of 13

logo

'Arulagam' was founded in 2002 as a non-profit organisation in honour and memory of Mr. Arulmozhi, who inspired many of his friends, including ourselves – the members of Arulagam – through his commitment to environmental conservation. We believe that regardless of its value to humanity, every form of life and its ecosystem is unique.

Newsletter

Subscribe to our newsletters to receive latest news and updates.
I agree with the Privacy policy