தமிழ் பறவையாளர்கள் சந்திப்பு ஜனவரி, 4, 2026 | Tamil Birders Meet, Jan 4 2026
தமிழ்நாட்டிலுள்ள பறவை ஆர்வளர்களுக்கான ஆண்டுக் கூடுகைத் திருவிழா இந்த ஆண்டு ஜனவரி மாதம் 4 ஆம் நாள் திருச்செங்கோடு- கே.எஸ்.ஆர். கல்வி வளாகத்தில் சிறப்பாக நடந்தேறியது.
சென்ற ஆண்டு புதுக்கோட்டைக்கு வழிதவறி வந்த பாறு பறவையின் பின்னால் சுற்றித்திரிந்ததால் அப்போது நடந்த நிகழ்வில் கலந்து கொள்ள இயலவில்லை. இந்த ஆண்டு கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என்று ஜெகநாதன் அவர்கள் அன்புக்கட்டளை இட்டிருந்தார். அதனடிப்படையிலும், பறவையியலில் புதிய இளந்தலைமுறை ஆர்வமுடன் ஈடுபட்டுவருவதைக் கண்டு தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தின் அடிப்படையிலும் திருவாளர்கள் சாந்தாராம், சுதாகர், பத்ரிநாராயணன் உள்ளிட்டோரைச் சந்திக்கும் முகமாகவும் இந்த ஆண்டு நடைபெறும் கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்று முன்னமே திட்டமிட்டிருந்தேன். பாறு தொடர்பான கண்காட்சி நடத்தவும் எண்ணியிருந்தோம்.
அதற்கேற்ப பயணத்திட்டத்தையும் வடிவமைத்திருந்தேன்.
4ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கெல்லாம் எழுந்து வீட்டிலிருந்து கிளம்பினேன். வீட்டுப்படியில் கால்வைக்கும்போது நீர்க்குமிழி கொப்பளிப்பது போல ஓலி மரத்திலிருந்து கேட்டது. வழியனுப்ப வந்த துணைவியார் இது எதனுடைய குரல் என்று கேட்டார். அக்குரல் நான் முன்னமே கேட்டகுரல். மேலும் இக்குரல் குறித்து பறவையியலாளர் ஜெகநாதன் அவர்களிடம் கேட்டுத்தெளிவு பெற்றிருந்தேன். அதனால் என் துணைவியார் கேட்டவுடன் அது scops owl — கவைமுக ஆந்தை எனப்பதிலளித்து விட்டு விடைபெற்றுவிட்டு எனது கூட்டுக்காரர்களுடன் பயணத்தைத் தொடங்கினேன். என்னுடன் சகப்பணியாளர்கள் செல்வி சுந்தரி, ரேவதி, ஜான் ஆகியோரும் வந்திருந்தனர்.
ஈரோடில் பறவை ஆர்வலரும் கவிஞருமான செல்வமணி அக்கா எங்களோடு இணைந்து கொண்டார்.
பறவைகளைப் பார்ப்பது போன்ற சந்தோசம் பறவையியலாளர்களைப் பார்க்கும்போதும் ஏற்படுகிறது. இறங்கியவுடன் டாக்டர் பத்ரிநாராயணன் அவர்களையும் திரு. குமரன் சதாசிவம் அவர்களையும் கண்டு உரையாடும் நல் வாயப்புக்கிடைத்தது.

சென்னை இயற்கைக் கழகத்தைச் சேர்ந்த சுதாகர் அவர்களுக்கும் ஜெகநாதன் அவர்களுடைய தகப்பனார் திரு பஞ்சாபகேசன் அவர்களுக்கும் எனது வணக்கத்தை தெரிவித்தேன். பறவை நோக்கலை மாணவர்களிடம் கொண்டு சேர்க்கும் ஆசிரியப் பெருமக்கள் சிலரும் வந்திருந்தனர். அவர்களுடனும் உரையாடி மகிழ்ந்தேன்.
கள்ளத்தனமான பறவை வணிகம் தொடர்பாக ஏ.மதிவாணன் அவர்கள் ஆற்றிய உரையையும் ATREE நிறுவனத்தைச் சேர்ந்த மதிவாணன் தாமிரபரணி பறவைகள் கணக்கெடுப்பு குறித்து ஆற்றிய உரையையும் வனத்துறையிலிருந்து முனைவர் சதீஸ் நிர்மல் அவர்கள் ஆற்றிய உரையையும் ஆர்வமுடன் செவி மடுத்தேன்.
பறவைகளுக்கும் மரங்களுக்குமான தொடர்பு குறித்து டாக்டர் பத்ரிநாராயணன் அவர்கள் ஆற்றிய உரையும் அறம் சார்ந்த பறவை நோக்கல் குறித்து திரு சாந்தாராம் அவர்கள் ஆற்றிய உரையும் குறிப்பிடும்படியாக இருந்தது.
பறவைகளை எப்படி இனங்கான்பது என்பது குறித்து அரவிந்த் அமிர்தராசு, அனிதா, சுரேந்தர் பூபாலன், ஆனந்த் சிபு, உரையாடினர். பறவைகள் பார்த்தல் மற்றும் பாதுகாப்பு குறித்து மாணவர்களிடம் எப்படிக்கொண்டு போக வேண்டும் என்று செல்வகணேசு, ஏஞ்சலின் மனோ, மரிய அந்தோனி, சாகித்ய செல்வராசு ஆகியோர் உரை நிகழ்த்தினர்.
பறவைகளுக்கு வளையமிடல் குறித்து பம்பாய் இயற்கைக் கழகத்தைச் சேர்ந்த சிவக்குமாரின் உரை அமைந்திருந்தது.

சேவா சக்திவேல் அவர்கள் நன்றி நவின்றார்.
எப்போதும் போல இளந்தலைமுறையைச் சேர்ந்த பறவை நோக்கர்கள் தங்களது பங்களிப்பைச் சிறந்த முறையில் நல்கினர். எனக்கும் உற்சாகம் தொற்றிக்கொண்டது.
பாறு கழுகுகள் பாதுகாப்பு குறித்து எனது சிற்றுரை அமைந்திருந்தது. அருளகம் சார்பாக மேற்கொண்டு வரும் பணிகளைப் பறவையாளர்களுடன் பகிர்ந்துகொண்டேன். இவ்வினத்தைக் காப்பது அனைவரது கூட்டுமுயற்சியால் மட்டுமே முடியும் என்பதை வலியுறுத்தும் முகமாக பாறு கழுகுகளின் கோட்டோவியத்தை திருவண்ணாமலையைச் சேர்ந்த ஓவியரும் பறவை ஆர்வலருமான சிவகுமார் அங்கேயே வரைந்து தந்தார். அந்த பாறு கழுகின் ஓவியத்தில் அதில் கலந்துகொண்ட பறவையாளர்கள் அனைவரது கைரேகையையும் பதியச் சொன்னோம். அனைவரது கைரேகை பதித்த பாறு கழுகு ஓவியமாக மிளிர்ந்தது. பார்ப்போரைப் பரவசப்படுத்தியது.
இந்த வண்ண ஓவியத்தை திரு சாந்தாராம் அவர்களும் திரு பஞ்சாபகேசன் அவர்களும் தொடங்கிவைத்தனர். மாணவர்களும் சிறுவர்களும் உற்சாகமாகத் தங்கள் கைரேகையப் பதித்தனர். இந்திகழ்வை சுரேந்தரும், செல்வகனேசும் ஒருங்கிணைத்தார்.
இது குறித்துக் கூடுதல் தகவல் பெற கீழே சொடுக்கவும் - https://birdcount.in/tamil-birders-meet-jan26/
