பழனிமலைப் பாதுகாப்புக் குழுமத்தின் முன்னாள் செயலர் திரு. கண்ணன் இயற்கை எய்தினார்

அன்பு நண்பர்களுக்கு,

இன்று அதிகாலையில் (4-11-2025) மேக்மோகன் அவர்களிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. பழனிமலைப் பாதுகாப்புக் குழுமத்தின் முன்னாள் செயலர் கண்ணன் சார் இயற்கை எய்தினார் என்ற தகவலை அவர் சொன்னபோது என்னால் நம்ப முடியவில்லை. காரணம், நேற்றுக் காலை 9.45 மணியிலிருந்து 11.45 மணிவரை பட்டிவீரன்பட்டியில் உள்ள அவரது இல்லத்தில் அவரைச் சந்தித்துச் சுமார் இரண்டு மணி நேரம் உரையாடினோம். 

அவரைப் பார்க்கச் சென்றபோது, ஐசக்கெகிம்கர் எழுதிய இந்தியப் பட்டாம்பூச்சிகள்  ‘The Book of Indian Butterflies’- by Isaac Kehimkar’s )என்ற நூல்  அவரது மேசையில் இருந்தது. நலம் விசாரித்த பின்னர் எங்களது உரையாடல் சுற்றுச்சூழல் நோக்கித் திரும்பியது…கடல்மட்டம் உயர்ந்து வருவது, தூண்டில் வளைவின் தாக்கம், பட்டாம் பூச்சிகள், தேனீ வளர்ப்பு, தாய்லாந்துப் பயணம், இலங்கைப் பயணம், பேரப் பிள்ளைகள், மழைப் பொழிவில் ஏற்படும் மாற்றங்கள், ஆள் பற்றாக்குறை காரணமாக தனது அப்பா அடித்த களைக்கொல்லி மருந்துகளின் தாக்கம், இளந்தலைமுறைகள் வெளிநாட்டுப் படிப்பை நாடிச் செல்வது என உரையாடல் நீண்டது. இலங்கைக்கு திருவாளர் ஸ்ரீஸ் கந்தராசா அழைப்பின்பேரில் சென்று வந்த பயணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு சென்று வந்தது, சுவீடனிலிருந்து இயங்கும் தேனீக் கூட்டமைப்பில் உறுப்பினராக இருப்பது  என உரையாடல் தொடர்ந்தபடி இருந்தது.  

தான் சிறு வயதாக இருந்தபோது சென்னையில் உள்ள அத்தை வீட்டிற்குச் செல்வோம். அப்போது மெரீனா கடல் சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவில் இருந்ததாகவும் தற்போது சிறிது நடந்த உடனேயே வந்துவிடுவதாகவும் அவர் சொன்னபோது நானும் அதை யோசித்துப்பார்த்து ஆமோதித்தேன். 

உணவு குறித்துப் பேச்சு வந்தபோது, என்  ஒருவனுக்காக தினம் சமைக்க வேண்டாம் எனக்கூறி விட்டதாகவும் அதனால் இரண்டு நாளைக்கு ஒரு முறை மட்டும் சமையல்காரப்பெண்மணி வந்து சமைத்துவைத்துவிட்டுச் சென்று விடுவார் என்றும் சோறு மட்டும் அவ்வப்போது சூடாக வைத்துக்கொள்வேன் என்றும் 67 வயது முடியப்போகிறது. கொஞ்சம் தான் சாப்பிட முடிகிறது என இயல்பாகப் பேசினார். 

இலங்கைப் பயணம் குறித்துப் பேசியபோது, நம் ஊரில் வளரும் பொரசு மரத்தை விட இலங்கையில் வளரும் பொரசு மரம் சுற்றளவில் மூன்று மடங்குப் பெரிதாக இருப்பதாகவும் தெரிவித்தார். இம்மாத இறுதியில் International Pollution Elimination Network அமைப்பின் அழைப்பின் பேரில் இலங்கை செல்லும் வாய்ப்பு எனக்கு உள்ளதாகவும் அப்போது நீங்களும்  வரலாமா என அவரிடம் கேட்டேன். ஓரிரு நாளில் திருவாளர் ஸ்ரீ யுடன் பேசிவிட்டுச் சொல்கிறேன் என்றார். எனது தாயாரும் உடன் இருந்ததால் அவருக்கு அலுப்பாகிவிடும் என்று உரையாடலை இடை நிறுத்திவிட்டு நானும் இராமேசுவரத்தில் நடைபெறும் மரக்கன்றுகள் நடும் பணியில் கலந்துகொள்வதற்காகப் போகவேண்டும் என்று கூறி விடைபெற்றேன். 

கிளம்பும் போது தனது எஸ்டேட்டில் விளைந்த மருந்து அடிக்காத பழங்கள் எனக் கூறி மூன்று ஆரஞ்சுப்பழங்களை எனது பையில் திணித்தார். பேருந்துப் பயணத்தில் சன்னல் ஓர இருக்கையில் அமர்ந்திருந்ததால் நண்பகல் வெயில் சுளீர் எனத்தாக்கியது. நாவறண்டது. பையிலிருந்து அவர் தந்த ஆரஞ்சுப் பழங்களைச் சுவைத்தபோது கொஞ்சம் பல் கூசியது. புதுத் தெம்பாகவும் இருந்தது. உடனே கையைத் துடைத்துவிட்டு எனது அலைபேசியை எடுத்துப் பழங்கள் அருமை உங்களுடன் உரையாடியதும் நன்றாக இருந்தது எனக் குறுஞ்செய்தி அனுப்பினேன். இது தான் நான் அவருக்கு அனுப்பும் கடைசிச் செய்தியாக இருக்கும் எனத் துளியும் நினைக்கவில்லை.

திரு. கண்ணன் (வயுது 67) அவர்கள் படித்ததோ மருந்தியல். ஆனால் தாவரங்கள் குறித்த தேர்ந்த புலமை மிக்கவராக இருந்தார். பட்டாம் பூச்சிகள் தேன் எடுக்க நாடும் தாவரங்கள், பட்டாம்பூச்சிகள் உணவாக்கும் தாவரங்கள் என பல்வேறு விசயங்களும் அவருக்கு அத்துப்படி. பொருளாதார நோக்கிலும் மரக்கன்றுகள் வளர்ப்பது குறித்து ஆழ்ந்த புலமையுடையவராக இருந்தார்.

இடிந்தகரையில் மரம் நடும் பணியிலிருந்தபோது அதை மேற்பார்வையிட ஆய்வாளராக வந்து தவறுகளைச் சுட்டிக்காட்டுவார். அவரிடமிருந்து நிறையப் படிப்பினைகளை நான் பெற்றேன். 

என்னிடம் அவர் நினைவு கூர்ந்த ஒரு சம்பவத்தைப் பகிர விரும்புகிறேன். 2007 ஆம் ஆண்டு கடற்கரையோரத்தில் மரக்கன்றுகள் நடுவதற்காகப் பல்வேறு நிறுவனங்கள் திட்ட அறிக்கை சமர்ப்பித்திருந்தன.  அருளகமும் சமர்ப்பித்திருந்தது. நிறுவனங்களைத் தேர்ந்தெடுப்பதற்காக நடந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக அவர் இருந்தார். அந்தக் கூட்டத்தில் கோயமுத்தூரில் இருக்கும் அருளகம் எப்படித் திருநெல்வேலியிலுள்ள இடிந்தகரையில் மரம் நட முடியும் எனத் தான் கேட்டதாகவும் உங்களது களச் செயல்பாட்டைப் பார்த்தபின்னர் எனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டேன் என்று என்னிடம் ஒரு முறை தெரிவித்தார். 

அவரது மகளது படிப்பிற்காக இரண்டரை ஆண்டுகள் கோயமுத்தூரிலுள்ள  சாய்பாபா காலணி அருகில் தங்கியிருந்தார். இவர் காபி குடிப்பதல் நாட்டம் மிக்கவர். அவருக்குப் பிடித்தமான டபுள் ஸ்ட்ராங் காபியைப் பருகிக்கொண்டே அவருடன் பலமுறை உரையாடியிருக்கிறேன். Mountain starts from Ocean’ என்ற சொல்லை அவர் அடிக்கடி சொல்வார். இதே தலைப்பில் அருளகம் சார்பாக நிர்மலா மகளிர் கல்லூரி மாணவிகளுக்கு நடத்திய நாட்டுநலப் பணித்திட்டத்தில்  உரையாற்றியும் இருக்கிறார். நினைவுகள் மட்டுமே இப்போது மிச்சமுள்ளது. 

அவரது இறப்பிற்கு அருளகம் தனது இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது. அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தார் இந்த அதிர்ச்சியிலிருந்து மீண்டு வரவேண்டும். அவர் இயற்கையின் மடியில் இளைப்பாரட்டும்.

இன்று அவரது நினைவாக இராமேசுவரம் தீவில் 200 மரக்கன்றுகளையும் பனங்கொட்டைகளையும் நட்டு அருளகம் சார்பாக அவருக்கு அஞ்சலி செலுத்தினோம். 

 

ஆம் ‘Mountain starts from Ocean’. 

அன்புடன்

அருளகம் அமைப்பினர்

logo

'Arulagam' was founded in 2002 as a non-profit organisation in honour and memory of Mr. Arulmozhi, who inspired many of his friends, including ourselves – the members of Arulagam – through his commitment to environmental conservation. We believe that regardless of its value to humanity, every form of life and its ecosystem is unique.

Reach Us