Articles

காரீயம் தவிர்ப்போம், ஆரோக்கியம் காப்போம்

காரீயம் தவிர்ப்போம், ஆரோக்கியம் காப்போம்

Lead is Toxicநாம் ஒரு புதுவகையான அழகான அச்சுறுத்தலை எதிர்கொண்டு வருகிறோம். அந்த அழகான ஆபத்து துடிப்பான நடைபழகக்கூடிய பச்சிளம் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்டிரையும் பெரியோர்களையும் பெரிதும் பாதிப்பதோடு இல்லாமல், வாழ்நாள் முழுதும் தொல்லையையும் ஏற்படுத்துகிறது . அந்த அழகான ஆபத்து காரீயம் (LEAD (Pb) எனப்படும் உலோகம் தான் .

ஆபத்தை விலை கொடுத்து வாங்குகிறோம் என்று சொல்வார்களே அது இது தான்.

காரீயம் என்பது இயற்கையாகக் கிடைக்கக்கூடிய ஒரு வகையான உலோகம் ஆகும். இந்த உலோகத்தால் பலவகைகளில் நன்மைகள் கிடைத்தாலும் பெரும்பாலும் இவை மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் நச்சுத்தன்மையளிக்கக்கூடிய அல்லது உடல்நலப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய தனிமமாகவே இருந்து வருகிறது. இன்றைய சமூகப்பொருளாதாரத்தில் காரீயம் மற்றும் அதனை சார்ந்த கழிவுகளால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் மிகமுக்கியப் பங்கு வகிக்கின்றன. எனவேதான் உலகமுழுவதும் காரீயத்திற்கு எதிரான குரல்கள் ஓங்கி ஒலித்துவருகின்றன. இதன் காரணமாக ஜக்கிய நாடுகள் சபை உலகமுழுவதும் ஒவ்வொரு வருடம் அக்டோபர் மாதத்தின் கடைசி வாரத்தை காரீயமில்லா வண்ணப்பூச்சு குறித்த விழிப்புணர்வு வாரமா கக் கடைபிடிக்கிறது. காரீயமானது பொதுவாக குழாய்கள்(பிளம்பிங் பொருட்கள்), துப்பாக்கி தோட்டாக்கள், பெட்ரோல், பேட்டரிகள்,வெடிமருந்துகள் போன்றவற்றில் பயன்படுத்தினாலும் வண்ணப்பூச்சுகள் மற்றும் அழகுசாதனங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான தயாரிப்புகளில் (காரீயம்) மிக அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றன.
காரீயத்தினால் (LEAD (Pb) பல காரியங்கள் ஆனாலும் இந்தியச் சந்தைகளில் விற்கப்படும் வண்ணப்பூச்சுகளில் நச்சுத்தன்மை மிகுந்த காரீயத்தினை அளவுக்கு அதிகமாக கலந்து விற்கப்படுவதை ‘டாக்ஸிக்ஸ் லிங்க்’ என்ற அமைப்பின் சமீபத்திய ஆய்வு உறுதிபடுத்தியுள்ளது. தமிழகத்திலிருந்து அருளகம் அமைப்பால் சேகரிக்கப்பட்ட மாதிரிகளில் இந்தியாவிலேயே அதிகளவில் காரீய நஞ்சு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

மேலும் மனிதனுக்குக் கேடுவிளைவிக்கக்கூடிய காரீயத்தினை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து முறையான தீர்வு இல்லை. நிலைமை இப்படி இருக்கையில் நம் அனைவரது கைகளிலும் வெகுசுலபமாகப் புரளக்கூடிய வண்ணப்பூச்சுகளில் நச்சுதன்மை வாய்ந்த காரீயம் அதிக அளவில் கலந்து விற்கப்படுவது நம் எல்லோரையும் கவலை கொள்ளச் செய்கிறது. காரணம் யாதெனில்.,
மனித உடலில் காரீயமானது படியுமானால் அனைத்து உறுப்பு மண்டலங்களையும் சேதத்தினை ஏற்படுத்தக்கூடியது. மேலும் இவைகளினால் வளர் இளங்குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் ஆகியோர்கள் அதிகமான பாதிப்புகளுக்கு உள்ளாகிறார்கள். உலக சுகாதார அமைப்பின் கணக்குப்படி பார்த்தோமானால் வருடத்திற்கு சராசரியாக 5 இலட்சத்திற்கு மேற்பட்ட குழந்தைகள் இதனால் பாதிக்கப்படுகிறார்கள்.

காரீயம் செய்யும் காரியங்கள்

குழந்தைகளுக்கு

குறிப்பாக வளர் இளம் / நடை பழகும் குழந்தைகளுக்கு காரீயமானது மிகவும் ஆபத்தாக இருக்கிறது. ஏனெனில் குழந்தைகளின் உடல் பெரியவர்களின் உடல் செயல்பாடுகளை விட காரீயத்தினை மிக எளிதாக மற்றும் வேகமாக உறிஞ்சும் தன்மையுடையதாக உள்ளது. எனவே தான் காரீயத்தினால் நேரடியாக பாதிக்கப்படுபவர்களில் இவர்களே முன்னணியில் உள்ளார்கள்.
பழைய வண்ணப்பூச்சுகளிலிருந்து உதிர்வதனாலோ/சுரண்டுவதனாலோ நச்சுத்தன்மை வாய்ந்த காரீயம் மணலில் கலந்து இருக்கக்கூடு ம். அதனை அறியாத குழந்தைகள் மணலில் விளையாடிய கைகளை அப்படியே தங்களுடைய வாயில் வைப்பதினாலும், வண்ணப்பூசப்பட்ட ஜன்னல்கள் மற்றும் கதவுகளை நக்குவதனாலும்/கடிப்பதனாலும் காரீயமானது குழந்தைகளின் உடலில் நேரடியாக உட்புகுகின்றன. மேலும் காரீயம் கொண்ட உணவு மற்றும் தண்ணீரை அருந்துவதாலும், காரீயத்தினை அடிப்படையாகக் கொண்ட வண்ணப்பூச்சுடன் கூடிய பொம்மைகளுடன் விளையாடுவதன் மூலமாகவும் குழந்தைகள் காரீயத்தின் பாதிப்புகளுக்கு உள்ளாகிறார்கள்.
குழந்தைகளின் இரத்தத்தில் காரீயமானது சிறிதளவு கூட உட்புகுமானால் அது..,
1. அவர்களுடைய செயல்பாடுகள் மற்றும் கற்கும் திறன் குறைந்து காணப்படுவார்கள்.
2. குறைந்த நுண்ணறிவுத்திறன்
3. கேட்கும் திறனில் சிக்கல்கள்
4. இரத்தச் சோகை
5. மூளை மற்றும் நரம்பு மண்டல பாதிப்புகள்
6. சில நேரங்களில் கோமா மற்றும் உயிரிழப்புகள் உள்ளிட்ட பல பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றன.

கர்ப்பிணிப் பெண்களுக்கு

கர்ப்பிணிப் பெண்களின் உடலில் சேரக்கூடிய காரீயமானது கால்சியத்துடன் எலும்புகளில் சேமிக்கப்படுகிறது. இது கர்ப்ப காலத்தின் போது காரீயத்தினை எலும்புகளின் வழியே வெளியேற்றுகிறது. இதனால் கருவிலிருக்கும் மற்றும் வளரும் குழந்தைகளுக்கும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்துகிறது. மேலும் இதன் காரணமாக..,
1. குழந்தைகள் மிக விரைவாகவோ அல்லது மிகச்சிறியதாகவோ பிறக்கிறது.
2. இதன் காரணமாக குழந்தையின் மூளை, சிறுநீரகம் மற்றும் நரம்பு மண்டலங்கள் கடுமையாகப் பாதிப்படைகின்றன.
3. மேலும் கற்றல் மற்றும் நடத்தை திறனில் குறைபாடு/சிக்கல்கள் அதிகரித்து காணப்படுகிறது.
4. கருச்சிதைவு ஏற்பட்டு தாயின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது.

பெரியவர்களுக்கு

1. உயர் இரத்த அழுத்தம்
2. சிறுநீரகச் செயல்பாடுகளில் சிக்கல்கள் / கோளாறுகள்
3. மூட்டு மற்றும் தசை வலி
4. மனநிலை செயல்பாடுகளில் கோளாறுகள் மற்றும்
5. நினைவாற்றல் இழப்பு
6. மேலும் ஆண்/பெண் இனப்பெருக்கக் கோளாறுகள் (அதாவது ஆண்களின் குறைவான/அசாதாரண விந்தணுக்களின் எண்ணிக்கை) போன்றவை இதில் அடங்கும்.

ஆய்வு முடிவுகள்

காரீயம் எவ்வாறு நம் உடலுக்குள் செல்கிறதுவண்ணப்பூச்சுகளிலிருந்து காரீயத்தை நீக்குவதற்கான உலகளவிலான செயல் திட்டத்துடன் இந்திய அரசாங்கம் இணைந்து செயல்பட்டு வருகிறது. இதன் காரணமாக நவம்பர் 01, 2016 முதல் வீடு மற்றும் அலங்கார வண்ணப்பூச்சுகளில் உள்ள காரீயத்தின் உள்ளடக்க ஒழுங்கு விதிமுறைகளை இந்திய அரசு அறிவித்து நடைமுறைப்படுத்தியது.

”நீங்கள் பயன்படுத்தும் வண்ணப்பூச்சானது எந்த அளவிற்குப் பாதுகாப்பானது” என்ற தலைப்பில் சுற்றுச்சூழல் அரசு சாரா அமைப்பான டாக்ஸிக்ஸ் லிங்க் என்ற அமைப்பு சமீபத்தில் இந்தியா முழுவதும் ஆய்வினை மேற்கொண்டது. அதில் இந்தியா முழுவதும் கிடைக்கக்கூடிய பெரும்பாலான வண்ணப்பூச்சுகளில் விதிமுறைகளை மீறி அதிக அளவில் காரீயம் கலந்திருப்பது இவ்வாய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வுக்காக நாடுமுழுவதும் அதாவது சத்தீஸ்கர், டெல்லி, கோவா, ஜார்கண்ட், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தமிழ்நாடு மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய பகுதிகளில் 32 வண்ணப்பூச்சு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு அவை NABL எனப்படும் தேசிய பகுப்பாய்வு ஆய்வகத்தால் அங்கீகாரம் பெற்ற ஸ்பெக்ரோ பகுப்பாய்வு ஆய்வகம். லிமிடெட், ஓக்லா, புது தில்லி (SPECTRO analytical lab. Ltd., Okhla, New Delhi) என்ற ஆய்வகத்தில் பகுப்பாய்வு செய்யப்பட்டன. ஆய்வு செய்யப்பட்ட மாதிரிகளில் நச்சுத்தன்மையுடைய காரியத்தின் அளவானது 10 பிபிஎம் முதல் 1,86,062 பிபிஎம் வரையிலாக இருந்துள்ளதனை ஆய்வின் முடிவில் கண்டறியப்பட்டுள்ளது. சோதனை செய்யப்பட்ட வண்ணப்பூச்சு மாதிரிகளில் 90 விழுக்காடு மாதிரிகளில் அனுமதிக்கபட்ட அளவை விட அதாவது 90 பிபிஎம் க்கு அதிகமாக காரீயத்தின் உள்ளீடானது இருந்துள்ளது இந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் 9% அதாவது வெறும் மூன்று வண்ணப்பூச்சு மாதிரிகளில் மட்டுமே காரீயத்தின் உள்ளீடானது 90 பிபிஎம் க்கு கீழே இருந்துள்ளது. இதில் ஆச்சரியமான விசயம் என்னவெனில் பகுப்பாய்வுக்கு உட்படுத்திய அனைத்து மாதிரிகளும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டவை. (சில மாதிரிகள் வலைதளங்களின் (ஆன்லைன் வர்த்தகம்) மூலம் வாங்கப்பட்டவையாகும்).
இந்த ஆய்வின் முடிவானது நாட்டில் விற்கப்படும் வண்ணப்பூச்சுகளில் அதிகப்படியான காரீயத்தின் உள்ளீடு என்பது காரீயத்தின் மீதான விதிமுறைகள் மிக மோசமாக பின்பற்றப்பட்டுச் செயல்படுத்துவதை பிரதிபலிக்கிறது. மேலும் நச்சுத் தன்மை வாய்ந்த காரீய உள்ளீடு குறித்த விதிமுறைகள் மற்றும் அறிவிப்புகளை வண்ணப்பூச்சு தயாரிப்பாளர்களுக்கு வழங்கிய பின்னரும் கூட நாடு முழுவதும் அதிகளவு காரீயம் கொண்ட வண்ணப்பூச்சுகள் இன்றும் பரவலாக கிடைக்கின்றன. இவை விதிமுறைகளை மீறுவதைத் தெளிவாக காட்டுகிறது.

இந்தியச் சந்தைகளில் விற்கப்படும் பெரும்பாலான வண்ணப்பூச்சு மாதிரிகளில் 84% உற்பத்தியாளர்களின் தயாரிப்புகளில் காரீயம் குறித்த ஒழுங்குமுறை மற்றும் பரிந்துரை குறித்த எந்தவிதமான வில்லைகளும் (லேபிள்) இடபெறவில்லை. இது விதிமுறைகளை மீறியதைத் தெளிவாக காட்டுகிறது. இதுபோன்ற பரிந்துரை வில்லைகள் இல்லாத வண்ணப்பூச்சு தயாரிப்புகள் இந்தியச் சந்தைகளில் கிடைப்பதை கண்காணிக்க அமைப்பு இல்லாததைத் தெளிவாக்குகிறது.

காரீயம் கலந்த வண்ணப்பூச்சானது நச்சுத்தன்மை கொண்டதோடு இல்லாமல் இவைகளால் குழந்தைகளுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பெரும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய விசமாகவும் உள்ளது. எனவே வண்ணப்பூச்சுகள் உள்ளிட்ட இதர தயாரிப்புகளில் காரீயத்தை பயன்படுத்தாமல் இருப்பதற்காக உலக சுகாதார அமைப்புகளால் உலகளவில் பெரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக டாக்ஸிக்ஸ் லிங்க்கின் அமைப்பின் மூத்த திட்ட ஒருங்கினைப்பாளர் பியூஷ் மொஹாபத்ரா (Piyush Mohapatra) கூறியுள்ளார்.மேலும் அவர் நச்சுத்தன்மையுடைய காரிய உள்ளீடு குறித்த சட்ட விதிமுறைகள் நடைமுறையில் கட்டாயமாக்கப்பட்ட நிலையில் இது குறித்த பரிந்துரை வில்லைகள் எதுவுமே இல்லாமல் வண்ணப்பூச்சுகள் கிடைப்பது ஆச்சரியமானது என கேள்வி எழுப்பினார்.

தமிழ்நாட்டிலிருந்து சேகரிக்கப்பட்ட 4 மாதிரிகள் பகுப்பாய்வு செய்யப்பட்டதில் அனைத்து வண்ணப்பூச்சு மாதிரிகளிலும் அதிக அளவு காரீயம் அதாவது 90 பிபிஎம் க்கு மேல் இருந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் நாடு முழுவதும் சேகரிக்கப்பட்ட வண்ணப்பூச்சு மாதிரிகளில் தமிழ்நாட்டினுடைய இரண்டு மாதிரிகளில் அதிக அளவில் காரிய உள்ளீடு அதாவது 1,86,062 பிபிஎம் மற்றும் 1,61,052 பிபிஎம் இருந்துள்ளதாக அருளகம் அமைப்பின் செயலாளர் சு.பாரதிதாசன் கவலை தெரிவித்துள்ளார்.

ஆண்டு முழுவதும் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் காரியத்தின் உள்ளீடு அதாவது 90 பிபிஎம் கட்டுப்பாட்டை கடைபிடிப்பதில் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களிடம் (SMEs) இடர்பாடுகள் உள்ளதையும் எப்பாடுபட்டாவது அதனை போக்க இந்திய அரசு ஒருங்கிணைந்த முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் எனவும். வீடுகளில் பயன்படுத்தக்கூடிய வண்ணப்பூச்சுகளில் இருந்து நச்சுத்தன்மை வாய்ந்த காரியத்தை முற்றிலுமாக ஒழிக்கச் சம்மந்தப்பட்ட அதிகாரிகளால் தீவிரமான / கடுமையான கண்காணிப்பை ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும் ‘டாக்ஸிக்ஸ் லிங்க்’ அமைப்பின் இணை இயக்குநர் சதீஷ் சின்ஹா தெரிவித்துள்ளார்.
வளர்ந்த நாடுகளில் காரீயத்தின் தரம், சேர்க்கை அளவு, கழிவுகளை நிர்வகித்தல் போன்றவற்றில் வலுவான சட்டங்களும் கண்காணிப்பும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகள் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளில் இதுபோன்ற சுற்றுச்சூழலுக்கும்/ சமுதாயத்திற்கும் தீங்கு விளைவிக்கும் பொருட்கள் தயாரிப்பை நிர்வகிக்கும் மற்றும் அதன் கழிவுகளை அப்புறப்படுத்து குறித்தும் போதியத் திறனைக் கொண்டிருக்கவில்லை என்பது பெரும் கொடுமையானது. இதன் காரணமாக உலகளவில் ஆண்டு முழுவதும் அளவுக்கு அதிகமான குழந்தைகள் இதனால் பாதிப்படைகிறார்கள்.

இதுபோன்ற மனித சமூகத்திற்கு கேடுவிளைவிக்கும் காரீயத்தினை வண்ணப்பூச்சுகளில் இருந்து நீக்க வலியுறுத்தி உலகளாவிய அளவில் எதிர்ப்புக் குரல்கள் ஓங்கி ஒலிக்கின்ற இந்தவேளையில்., இந்தியச் சந்தைகளில் குறிப்பாகத் தமிழகத்தில் தயாரிக்கப்படும் கோயமுத்தூரில் விற்கப்படும் வண்ணப்பூச்சுகளில் அளவுக்கு அதிகமாக அளவில் காரீயம் கலந்து விற்கப்படுவது பெரும் கவலையை ஏற்படுத்துகிறது.

இதனை கருத்தில் கொண்டும் நமது எதிர்காலச் சமூக நலனுக்காகவும் இந்திய அரசாங்கம் வண்ணப்பூச்சுகளில் காரீயத்தின் பயன்பாடுகள் குறித்த விழிப்புணர்வுகளும், கடுமையான சட்டங்களும், அதிக கண்காணிப்புகளும் மற்றும் கடுமையான நடவடிக்கைகளும் மேற்கொள்ள வேண்டும் என்பதே மக்கள் பணியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட அருளகம் அமைப்பின் வேண்டுகோள் ஆகும்.

டாக்ஸிக்ஸ் லிங்க் அமைப்பினால் செய்யப்பட்ட ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டவைகள்

  1. ஆய்வு செய்யப்பட்ட வண்ணப்பூச்சு மாதிரிகளில் 90% சதவீதம் 90 பிபிஎம் க்கு அதிகமாக இருந்துள்ளது.
  2. ஆய்வு செய்யப்பட்ட மாதிரிகளில் 10 பிபிஎம் முதல் 186062 பிபிஎம் வரை காரியத்தின் உள்ளீடு கண்டறியப்பட்டுள்ளது.
  3. கர்நாடகாவில் உள்ள பெங்களூரிலிருந்து சேகரிக்கப்பட்ட தங்க மஞ்சள் நிற வண்ணப்பூச்சுகளில் காரியத்தின் உள்ளீடானது மிகக்குறைந்த அளவு (10 பிபிஎம்) காணப்பட்டது.
  4. தமிழ்நாட்டிலிருந்து சேகரிக்கப்பட்ட தங்க மஞ்சள் நிற வண்ணப்பூச்சுகளில் காரியத்தின் உள்ளீடானது மிக அதிக அளவு 186062 பிபிஎம் காணப்பட்டது.
  5. அமேசானிலிருந்து வாங்கப்பட்ட வண்ணப்பூச்சுகளிலும் அதிக அளவு காரிய உள்ளீடு 4306 பிபிஎம் இருந்துள்ளது.

ஆகவே

பெயிண்ட்களில் காரீய உலோகத்தைத் தவிர்ப்போம்.

(Let's Ban Lead in Paint | YouTube Link)

logo

'Arulagam' was founded in 2002 as a non-profit organisation in honour and memory of Mr. Arulmozhi, who inspired many of his friends, including ourselves – the members of Arulagam – through his commitment to environmental conservation. We believe that regardless of its value to humanity, every form of life and its ecosystem is unique.

Newsletter

Subscribe to our newsletters to receive latest news and updates.
I agree with the Privacy policy